வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. வானிலை மையம் வார்னிங்
தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் நாளைய தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல இடங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வரும் 23ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தொடர் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரம் யாரும் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நீலகிரியில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை, மஞ்சூர், தோவாலா, கூடலூர் ஆகிய 4 இடங்களில் தமிழக பேரிடர் மீட்புப்படையினர் முகாமிட்டுள்ளனர். இந்த ஒவ்வொரு குழுவினரும் உரிய மீட்பு உபகரணங்களுடனும் தலா 10 வீரர்களுடனும் தயார் நிலையில் உள்ளனர்.
இதனிடையே வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் இன்று தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளா புதுச்சேரி காரைக்கால், கடலோர ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கன முதல் மிக கனமழையும், கடலோர கர்நாடகா மற்றும் தெற்கு உள்கரநாடகவில் இன்றைய தினம் அதிக கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று வீசும் வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?