மிரட்டிய பாலியல் தொழிலாளி..சுத்தியால் அடித்து கொன்று உடலை சூட்கேஸில் மடித்து வைத்த இளைஞர்
பாலியல் தொழில் செய்து வந்த பெண் அதிக பணம் கேட்டதால் ஆத்திரத்தில் சுத்தியால் அடித்துக்கொன்று சூட்கேஸில் அடைத்து வைத்ததாக கைதான சென்னை இளைஞர் கூறியுள்ளார்.
தனிமையில் இருக்க வேண்டும் என்று இளம் பெண்ணை அழைத்து பணம் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டு அது கொலையில் முடிந்துள்ளது. சடலத்தை கண்டுபிடித்த சில மணி நேரங்களுக்குள் கொலையாளி சிக்கியதால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் துரைப்பாக்கம் காவல்துறையினர்.
சென்னை துரைப்பாக்கம் குமரன் குடில் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ரத்த கரைகளுடன் சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். துரைப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ரத்த கரைகளுடன் இருந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது, பெண் ஒருவரை வெட்டி சூட்கேசில் வைத்து வீசி சென்றது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த போலீசார் சூட்கேஸில் துண்டு துண்டாக இருந்த பெண் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பெண்ணின் அடையாளங்களை வைத்து யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையில் மாதவரத்தைச் சேர்ந்த 32 வயதுடைய தீபா என்பவரை காணவில்லை என அவரது சகோதரர் வீரமணி என்பவர் துரைப்பாக்கம் பகுதியில் கடந்த 2 நாட்களாக தேடி வந்தார். துரைப்பாக்கம் போலீசாரிடமும் அது குறித்து அவர் விசாரித்தார். இந்த நிலையில் சூட்கேஸில் பெண் உடல் கிடைக்கப்பெற்றதால் தீபாவின் சகோதரர் வீரமணியை துரைப்பாக்கம் போலீசார் நேரில் வரவழைத்தனர்.
சூட்கேஸில் இருந்த பெண்ணை போலீசார் அவரிடம் காண்பித்த போது காணாமல் போன தனது சகோதரி தீபாதான் என அடையாளம் காட்டினார். இதையடுத்து பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்த தீபா என்ற வெள்ளையம்மாள் திருமணம் ஆகாதவர். கடந்த 17 ஆம் தீபா வீட்டில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது சகோதரர் வீரமணி Find my device app மூலம் தனது அக்கா தீபாவை தேடி பார்த்துள்ளார். அப்போது துரைப்பாக்கம் குமரன் குடில் என்ற பகுதியில் லொகேஷன் காண்பித்துள்ளது. பிறகு நேற்று வீரமணி துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் தனது அக்கா காணவில்லை என்பது தொடர்பாக தெரிவித்து விட்டு சென்ற நிலையில் தான் தீபா கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் உடல் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து இந்த கொலை சம்பவம் குறித்து சென்னை காவல்துறை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்ரவர்த்தி, அடையாறு காவல் துணை ஆணையர் பொன் கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதே பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சூட்கேஸூடன் ஒருவர் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் துரைப்பாக்கம் பார்த்தசாரதி நகர் 4 வது தெருவில் வசித்து வரும் மணிகண்டன் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த முகவரிக்கு சென்ற போலீசார் அங்கிருந்த மணிகண்டனை கைது செய்தனர்.மேலும் வீட்டில் இருந்த தடயங்களை போலீசார் சேகரித்தனர். தடயவியல் துறை அதிகாரி ரமணன் கொலை நடந்த இடம், பெண்ணின் உடல் எடுக்கப்பட்ட இடத்தில் தடயங்களை சேகரித்தார். பிறகு கைதான மணிகண்டனிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
கொல்லப்பட்ட தீபா பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. கைதான மணிகண்டன் கடந்த 3 மாதங்களாக துரைப்பாக்கத்தில் உள்ள சகோதரி வீட்டில் தங்கி உள்ளார். பெருங்குடி பகுதியில் செயல்பட்டு வரும் கார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சகோதரி மற்றும் குடும்பத்தினர் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்று விட்டனர்.
இதனால் மணிகண்டன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் தான் அவரை செல்போன் மூலம் தீபா தொடர்பு கொண்டதாக தெரிகிறது. தனிமையில் இருக்க அழைத்ததாக கூறப்படுகிறது. அதற்காக தீபா ரூ. 6 ஆயிரம் கேட்டதாக தெரிகிறது. மணிகண்டன் மறுத்ததாகவும் மீண்டும் மீண்டும் தீபா வற்புறுத்தியதாக தெரிகிறது. கடந்த 17 ஆம் தேதி இரவு மணிகண்டன் அவரை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
பிறகு கேட்ட பணத்திற்கு அதிகமாக கேட்டதால் தீபாவிற்கும், மணிகண்டனிற்கும் வாய் தகராறு ஏற்பட்டது. அது முற்றியதால் கைகலப்பானது. அப்போது "நீ என்னை அழைத்ததை எல்லோருக்கும் தெரிவித்து விடுவேன்" என்று மிரட்டியதால் மணிகண்டன் பயந்து போனார். அப்போது வீட்டில் இருந்த சுத்தியலால் அடித்ததில் தீபா அங்கேயே ரத்த காயத்துடன் உயிரிழந்ததாக தெரிகிறது.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் பயந்து போன மணிகண்டன் அதே பகுதியில் உள்ள சூட்கேஸ் புதிதாக புக் செய்தார். பிறகு தீபாவின் எலும்புகளை உடைத்து சூட்கேசில் துணி வைப்பது போல மடித்து வைத்தார். இதையடுத்து மணிகண்டன் துரைப்பாக்கம் குமரன் குடில் மெயின்ரோட்டில் தனியார் கிளினிக் அருகில் புதியதாக கட்டுமானப்பணி நடைபெறும் இடத்தின் அருகில் சூட்கேஸை யாருக்கும் தெரியாமல் மணிகண்டன் வீசி விட்டு சென்றார்.
வீட்டில் ஒன்றும் தெரியாதது போல வழக்கமான பணிகளை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதனை மணிகண்டன் வாக்குமூலமாக அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தீபாவின் உடல் அழுகிய நிலையில் சூட்கேசிற்குள் இருந்துள்ளது. கொலை செய்யப்பட்ட தீபாவின் உடலை 2 நாட்கள் வீட்டிலேயே மறைத்து வைத்து இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீபா உடல் கண்டெடுக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே கொலை செய்தவரை துரைப்பாக்கம் போலீசார் திறமையாக விசாரித்து கைது செய்ததற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டி உள்ளனர்.
மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான துரைப்பாக்கத்தில் சர்வசாதாரணமாக பெண்ணை கொலை செய்து விட்டு சூட்கேஸில் வீசி சென்றிருப்பது அந்த பகுதி அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?