சூட்கேஸில் துண்டு துண்டாக கிடந்த பெண்ணின் சடலம்.. அதிகாலையில் அதிர்ச்சியில் உறைந்த சென்னை
சென்னையில் சாப்ட்வேர் கம்பெனிகள் அதிகம் நிறைந்த துரைப்பாக்கம் பகுதியில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் சூட்கேசில் இருந்து துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை காலை விடிந்த போதே துரைப்பாக்கம் பகுதியில் அப்படி ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடைபெறும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.சாலையோரத்தில் கிடந்த சூட்கேஸிற்குள் ஒரு பெண்ணின் உடலை துண்டு துண்டாக வெட்டி அடைத்து வைத்து வீசி விட்டு சென்றுள்ளனர் மர்ம நபர்கள். கொலையானது யார்? எதற்காக இப்படி கொன்று சாலையில் வீசிவிட்டு சென்றுள்ளனர் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்த போதுதான் படிப்படியாக மர்மம் விலகிறது.
சென்னை துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் குமரன் குடில் பகுதியில் கிடந்த சூட்கேஸ் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். குறிப்பாக சூட்கேசில் அதிக அளவில் ரத்தக்கறை இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சூட்கேசை மீட்டு திறந்து பார்த்தனர். இதில், பெண் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், கண்டெடுக்கபட்டுள்ளது.
பெண்ணின் உடலை மீட்ட போலீசார், உடனடியாக விசாரணையை தொடங்கியுள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்தக் கொலை எங்கு நடந்தது.. வேறு ஏதேனும் இடத்தில் கொலை செய்து உடலை கொலையாளிகள் இங்கு கொண்டு வந்து போட்டனரா? என்பது உள்பட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
சூட்கேஸ் உடன் யாரேனும் சென்றார்களா? என சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து வருகிறார்கள். தடயவியல் நிபுணர்களும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.சென்னையின் மிக முக்கியமான இடமான துரைப்பாக்கத்தில் பெண்ணின் சடலம் சூட்கேசில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சூட்கேசில் இருந்த பெண்ணின் சடலம் தீபா என்கிற வெள்ளையம்மாள் 32 வயது மாதவரம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
அக்காவின் செல்போன் அணைக்கப்பட்டுள்ள நிலையில் Find my device மூலமாக துரைபாக்கத்தில் அக்கா தீபா இருப்பதை கண்டுபிடித்து துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று இரவே தகவலை அவரது தம்பி தெரிவித்துள்ளார்.ஆனால் போலீசார் மணலி காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை சூட்கேசில் சடலம் இருப்பதை கண்டு அவரது தம்பியை வைத்து அடையாளம் கண்டுபிடித்து தீபா என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?