Aravind Swami: “என் புள்ளைக்கு ஒரு நியாயம் ரசிகனா இருந்தா அப்படியா..?” அஜித் ரூட்டில் அரவிந்த் சாமி!

கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் 27ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் ரசிகர் மன்றம் குறித்தும் மாநாடு திரைப்படம் பற்றியும் அரவிந்த் சாமி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

Sep 19, 2024 - 21:14
 0
Aravind Swami: “என் புள்ளைக்கு ஒரு நியாயம் ரசிகனா இருந்தா அப்படியா..?” அஜித் ரூட்டில் அரவிந்த் சாமி!
அரவிந்த் சாமி - கார்த்தி

சென்னை: மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அரவிந்த் சாமி. அதன் பின்னர் மணிரத்னத்தின் ரோஜா படத்தில் ஹீரோவாக என்ட்ரியானார். தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வந்த அரவிந்த் சாமி, திடீரென சினிமாவில் இருந்து பிரேக் எடுத்தார். சொந்தமாக பிஸினஸ் செய்துவருவதால் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த அவர், தனி ஒருவன் படத்தில் சித்தார்த் அபிமன்யூவாக மெர்சல் காட்டியிருந்தார். அலட்டாமல் மிரட்டலாக வில்லத்தனம் செய்திருந்த அரவிந்த் சாமிக்கு மீண்டும் கோலிவுட்டில் வாய்ப்புகள் தேடிச் சென்றன. 

தற்போது கார்த்தியுடன் இணைந்து மெய்யழகன் படத்தில் நடித்துள்ளார். 96 படம் மூலம் பிரபலமான பிரேம்குமார் இயக்கியுள்ள மெய்யழகன் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம், அரவிந்த் சாமிக்கு கம்பேக் கொடுக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், மாநாடு படத்தில் நடிக்க முடியாமல் போனது குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார் அவர். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடித்த மாநாடு படத்தில், எஸ்ஜே சூர்யா வில்லனாக மிரட்டியிருந்தார்.

இந்த கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது அரவிந்த் சாமி தான், ஆனால் அப்போது அவரால் உடனடியாக கால்ஷீட் கொடுக்கமுடியவில்லை. இதுபற்றி பேசியுள்ள அவர், மாநாடு படத்தில் நடிக்க முடியாமல் போனதால், இப்போது வரை அந்தப் படத்தை பார்க்கவில்லை. எஸ்ஜே சூர்யா நடித்த வில்லன் கேரக்டருக்காக என்னை முழுமையாக தயார் செய்திருந்தேன். என் சினிமா கெரியரில் நான் மிஸ் செய்த மிக முக்கியமான படம் மாநாடு எனக் கூறியுள்ளார். அதேபோல், இன்னொரு படத்தை தவறவிடக்கூடாது என்பதற்காக தான் மெய்யழகனில் நடித்துள்ளதாகவும் அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார்.

அதேபோல், ரசிகர்மன்றம் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ள அரவிந்த் சாமி, அதில் அஜித் ரூட்டை ஃபாலோ செய்கிறார். அதாவது எனது மகன் ஒரு நடிகனின் ரசிகர் மன்றத்துக்கு தலைவராகப் போகிறேன் என சொன்னால், அதற்கு நான் சம்மதிக்க மாட்டேன். சினிமா பார்ப்பது வேறு, நடிகனுக்கு ரசிகர் மன்றம் வைப்பது வேறு. எனது மகனாக இருந்தால் நான் எதை செய்யக் கூடாது என சொல்வேனோ, அதேதான் ரசிகர்களுக்கும் என பஞ்ச் வைத்து பேசியுள்ளார். அரவிந்த் சாமியின் இந்த வீடியோவை அஜித் ரசிகர்களும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow