பெரம்பூரில் 4வது ரயில் முனையம்..தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் சொன்ன குட்நியூஸ்

Southern Railway : 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கிளாம்பாக்கம் ரயில் நிறுத்தம் நடைமுறைக்கு வந்து விடும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

Jul 25, 2024 - 11:06
Jul 26, 2024 - 10:02
 0
பெரம்பூரில் 4வது ரயில் முனையம்..தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் சொன்ன குட்நியூஸ்
Southern railway General Manager

Southern Railway : சென்னை கடற்கரை, சென்னை எழும்பூர், சென்னை பூங்கா, செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, கிண்டி,பரங்கிமலை உள்ளிட்ட 77 ரயில் நிலையங்கள் அம்ரித் ரயில் நிலையங்கள் என்ற திட்டத்தின் கீழ் மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். 4 வது முனையமான வில்லிவாக்கம் என்பதனை பெரம்பூருக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆர்.என்.சிங் கூறியுள்ளார்.

தெற்கு ரயில்வே பொது மேலாளர்  ஆர்.என்.சிங் சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து தமிழகத்திற்கு ரயில்வே பட்ஜெட் மூலம் கிடைக்கும் திட்டங்கள் குறித்து விளக்கினார். செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.என்.சிங்,தமிழ்நாட்டுக்கு காங்கிரஸ் ஆட்சியில் ரயில்வேக்கு 879 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் மோடி ஆட்சியில்  6, 362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் அது நவீனமாக மாற்றப்பட உள்ளது.

இந்த ஆண்டு விமான நிலையத்திற்கு இணையாக சென்னை கடற்கரை, சென்னை எழும்பூர், சென்னை பூங்கா, செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, கிண்டி,பரங்கிமலை உள்ளிட்ட 77 ரயில் நிலையங்கள் அம்ரித் ரயில் நிலையங்கள் என்ற திட்டத்தின் கீழ் மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 4 வது முனையமான வில்லிவாக்கம் என்பதனை பெரம்பூருக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக பெரம்பூர் முதல் அம்பத்தூர் வரை லைன் போடும் பணி தொடங்கப்பட உள்ளது. இதற்காக ஆய்வு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் விரிவான திட்ட அறிக்கைகள் தயார் செய்து மத்திய ரயில்வே துறைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த திட்ட அறிக்கை இந்தாண்டு அக்டோபரில் அனுப்ப பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. தமிழகத்திற்கு புதிதாக 40 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளது. அதற்காக தமிழக அரசு நிலத்தை கையகப்படுத்தி தந்தால் விரைந்து பணியை முடிக்க தெற்கு ரயில்வே தயாராக இருக்கிறது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரையிலான ரயில் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 18 கி.மீ.தூரத்திற்கு ரூ. 733 கோடி செலவில் அமைக்க திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் அதற்கு நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி தரவில்லை. அந்த திட்டத்தை கைவிடும் படி ரயில்வே துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. சுற்றுச்சூழல் பிரச்சினையை மேற்கோள் காட்டி தமிழக அரசு அந்த திட்டத்தை கைவிடும் படி கேட்டுள்ளது. 

மேலும் 3 வது ரயில் முனையமான தாம்பரத்தில்  கட்டுமான பணி அடுத்த ஆண்டு  ஜூன் மாதம்  தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் கூடிய முனையமாக தனியார் பங்களிப்போடு இந்த திட்டத்தை செயல்டுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.  இந்த ஆண்டு அக்டோபர் மாதம்  திட்டறிக்கம் சமர்ப்பிக்கப்படும். சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூர் நோக்கி 4 வது ரயில் தண்டவாள பணி செப்டம்பர் மாதம் முடியப்போகிறது. அக்டோபர் மாதத்தில் ரயில்கள் இயங்கும். 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டிய புதிய கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது.  அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்தப் பணிகளை முடித்து தமிழக அரசு கொடுத்தவுடன் புதிய ரயில் நிலைய கட்டும் பணிகள் தொடங்கும். அடுத்த ஆண்டு மார்ச் கிளாம்பாக்கம் ரயில் நிறுத்தம் நடைமுறைக்கு வந்து விடும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். 2014 முதல் 2024 வரையிலான பத்து ஆண்டுகளில்  தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட தமிழ்நாட்டில், 1,302 கிமீ தொலைவுக்கு புதிய ரயில்  தண்டவாளங்கள்  அமைக்கப்பட்டிருப்பதுடன்  2,152 கிமீ தொலைவுக்கான  ரயில் வழித்தடம் மின்மயமாக்கப்பட்டுள்ளது.  687 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.  தற்போது ரூ.33,467 கோடி மதிப்பீட்டில் 2,587 கிமீ  தொலைவுக்கு  புதிய பாதை அமைப்பதற்கான 22 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சென்னை எழும்பூர், சென்னை கடற்கரை, எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், சென்னை பூங்கா, அம்பத்தூர், ஆவடி, பெரம்பூர், மாம்பலம், கிண்டி, தாம்பரம், குரோம்பேட்டை, அரக்கோணம், அரியலூர், கோவை சந்திப்பு, கோயம்புத்தூர் வடக்கு, மதுரை, ஜோலார்பேட்டை, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், நாகர்கோவில், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்செந்தூர்,  திருப்பூர். திருவண்ணாமலை, வேலூர், சேலம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள 77 ரயில் நிலையங்கள் அமிர்த ரயில் நிலையங்களாக மேம்படுத்தப்பட உள்ளது. 

தமிழகத்தில் ராமேஷ்வரம் தனுஷ்கோடி திட்டத்தை கைவிட மாநில அரசு எங்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் ஒத்துழைப்பு இல்லை. மத்திய அரசு பாகுபாடின்றி செயல்படுகிறது. அறிவித்த திட்டத்தை செயலாக்க முனைப்பு காட்டுகிறோம். ஆனால் மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை.6080 கோடி கடந்த ஆண்டு,இந்த ஆண்டு 6362 கோடி ஒதுக்கீடு, 8000 கோடி வரை ஒதுக்க தயாராக உள்ளோம். ஆனால் மாநில அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 1லட்சத்து 9ஆயிரம் கோடி ரயில்வே, மற்றும் பயணிகள் பாதுகாப்பிற்கு ஒதுக்கீடு செய்துள்ளோம் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow