போதைப்பொருள் பழக்கம்.. இளைஞர்கள் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி
திமுக அரசு காவல்துறை சுதந்திரமாக செயல்படச் செய்து போதை பொருளை தமிழகத்தில் அறவே இல்லாமல் ஒழித்திட்டு, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்காலத்தை பாதுகாத்திட திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று சட்டசபை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் குறித்தும், இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சீரழிவது குறித்தும் "தமிழ்நாட்டில் போதைபொருள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது; திமுக அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து, போதை பொருள் புழக்கம் தடுக்கவேண்டும்" என 2 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியும் எச்சரித்தும் வந்துள்ளேன்.
அப்போதே உரிய நடவடிக்கை எடுத்து போதைப்பொருள் புழக்கத்தை தடுத்திருந்தால் , இன்றைய தினம் மாணவர்கள் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி அவர்களது வாழ்க்கை சீரழியும் நிலை ஏற்பட்டு இருக்காது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் வீடுகளிலும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்ட செய்திகள் வந்துள்ளன.
இச்சோதனையின் ஊடாக, மாணவர் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து, பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வர சொல்லியதால் மன அழுத்தத்தில் தவறான முடிவெடுக்க முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி மிகவும் வருத்ததக்குரியது.
இனியாவது இந்த திமுக அரசு காவல்துறை சுதந்திரமாக செயல்படச் செய்து போதை பொருளை தமிழகத்தில் அறவே இல்லாமல் ஒழித்திட்டு, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்காலத்தை பாதுகாத்திட திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
What's Your Reaction?