முதல்வர் ஸ்டாலினை தேடிப்போய் சந்தித்த வானதி சீனிவாசன்.. கோவை மக்களுக்கு குட் நியூஸ்
முதலமைச்சர் ஸ்டாலின் உடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமான விதத்தில் இருந்தது. கோவை பகுதி மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நல்ல செய்தியை தந்திருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளார் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன். இந்த சந்திப்பிக்குப் பிறகு பேசிய வானதி சீனிவாசன், "முதலமைச்சர் ஸ்டாலின் உடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமான விதத்தில் இருந்தது என்றும் எப்போதும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக மக்களின் தேவைகளை அரசுக்கு எடுத்துச் செல்லும் மக்கள் பிரதிநிதிகளாக செயல்பட்டு வருகிறோம் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், கோவை மட்டுமல்லாது ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட வளர்ச்சிக்கு மிக முக்கிய தேவையாக இருந்து வந்த கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து இன்று முதலமைச்சரை சந்தித்து பேசினோம். கோவை விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் மேம்படுத்த விமான நிலைய மேம்பாட்டு பணிகளுக்காக மாநில அரசு நிலங்களை கையகப்படுத்தி தரவேண்டும். அது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து தாமதப்படுத்தி வந்தது.ஒரு வழியாக தற்போது விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தேவைப்படும் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி கொடுத்துள்ளது.
விவசாயிகளுக்கு உரிய நில இழப்பீடு தொகையும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பன்னாட்டு விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டுமென்றால் அது மத்திய அரசு அதிகாரத்தின் கீழ் வரும். மற்றபடி, தனியார் நிறுவனம் ஒரு விமான நிலையத்தை மேம்படுத்த நினைத்தால், அப்போது மாநில அரசை அதில் ஒரு பங்குதாரராக சேர்த்துக் கொள்ளும்.
கோவை விமான நிலையத்தை மத்திய அரசு விரைவுப்படுத்த உள்ளதால், தமிழக அரசு அதனை தொடர்ந்து தாமதப்படுத்தி வந்தது. இப்படியான சூழலில் தற்போது கோவைக்கு ஒரு நல்ல செய்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளார். எந்தவித நிபந்தனையுமின்றி கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தேவையான நிலங்களை மத்திய அரசுக்கு அளிக்க தமிழக அரசு ஒப்புக் கொண்டுள்ளது என்பதை தற்போது முதலமைச்சர் உறுதிப்படுத்தி உள்ளார்.
மாநில அரசின் நிலங்களை கையகப்படுத்தி கொடுத்த பின்பு 1000 கோடி ரூபாய் செலவில் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதன் மூலம் ஊட்டி, ஈஷா யோகா மையம் போன்ற இடங்களுக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் மற்ற தொழில்துறை சேர்ந்தவர்கள் மாணவர்கள் என பலரும் பயன்பெறுவார்கள் என்றார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் பாஜகவினர் கலந்து கொண்டதும், அண்ணாமலை உள்ளிட்டோர் கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தியதும் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இன்று திடீரென முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார். தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், "கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் பாஜக கலந்து கொண்டது குறித்து பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன. எப்போதும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக மக்களின் தேவைகளை அரசுக்கு எடுத்துச் செல்லும் மக்கள் பிரதிநிதிகளாக செயல்பட்டு வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?