ஆடி மாதத்தில் என்னென்ன விஷேசங்கள்.. ஆடி அமாவாசை ஏன் சிறப்பு வாய்ந்தது?

Aadi Month 2024 Special : ஆடி மாதம் ஜூலை 17ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16 வரை உள்ளது எந்த நாளில் என்ன விஷேசம் நடைபெறும் என்று பார்க்கலாம்.

Jul 17, 2024 - 07:27
Jul 18, 2024 - 10:22
 0
ஆடி மாதத்தில் என்னென்ன விஷேசங்கள்.. ஆடி அமாவாசை ஏன் சிறப்பு வாய்ந்தது?
Aadi Month 2024 Special Aadi Amavasai

Aadi Month 2024 Special : ஆடி மாதம் சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதம்தான் ஆடி மாதம். ஆடி முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையும் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்காது.  இந்த மாதத்தில் ஆடி தபசு, ஆடி அமாவாசை, ஆடி பூரம், ஆடி பெருக்கு என அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களை கட்டும். ஆடி மாதத்தில் வரும் பவுர்ணமியும் அமாவாசையும் சிறப்பு வாய்ந்தது.

ஆடி செவ்வாய்:

ஆடி பிறப்பே இறை வழிபாட்டுக்கு உரிய நாள். ஆடி செவ்வாய் தேடிக்குளி என்பார்கள். ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்று பழமொழியே உண்டு. ஆடியில் விதை விதைத்தல், விவசாயம் செய்தல், துணி நெய்தல், குடிசைத் தொழில் செய்தல், போன்ற வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொள்ளும் முக்கியமான ஆதார வேலைகளில் ஈடுபடுவார்கள். 

திருவிழாக்கள் நிறைந்த ஆடி மாதம்: 

ஆடி 1ஆம் தேதி மாத பிறப்பு தொடங்கி ஆடி 31ஆம் தேதி கடைசி ஆடி வரை திருவிழாதான்.   ஆடி வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கூடி வரவும் விரதம் மேற்கொள்கின்றனர். ஆடி ஞாயிறன்று அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றி வணங்குவார்கள். 

ஆடி பௌர்ணமி: 

ஆடி மாதத்தில் பவுர்ணமியும் சிறப்பான நாளாகும். இந்த நாளில்தான் நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் ஆடித்தபசு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  ஆடி 05 ஜூலை 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  ஆடி பௌர்ணமி நாளில் ஆடித்தபசு விழா கொண்டாடப்படுகிறது. 

ஆடி கிருத்திகை: 

கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த  நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம். இந்த மாதம் ஆடிக்கிருத்திகை ஆடி 13, ஜூலை 29 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. 

ஆடி பதினெட்டாம் பெருக்கு: 

ஆடி மாதத்தில் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகிறார்கள். காவிரி கரையோரங்களில் இந்த விழா களைகட்டும். காவிரி அன்னைக்கு சீர் செய்து வணங்குவது வழக்கமாக உள்ளது. தாமிரபரணி கரையிலும் ஆடி பெருக்கு உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி பதினெட்டாம் பெருக்கு ஆடி 18ஆம் தேதி ஆகஸ்ட் 3 சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. 

ஆடி அமாவாசை: 

ஆடி அமாவாசை முன்னோர்கள் வழிபாட்டிற்கு உரிய நாள். ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் பயணம் செய்வார்.  சந்திரன் தனது சொந்ந வீட்டில் ஆட்சி பெற்று  சூரியனுடன் தொடர்பு  ஏற்படும் நாள் ஆடி அமாவாசை நாளாகும்.   முன்னோர்களுக்கு திதி கொடுக்க சிறப்பான நாளாகும். ஆடி அமாவாசையை பித்ருக்கள் தினமாக கடைபிடிக்க வேண்டும். அன்று இறைவனடி சேர்ந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் நிறைவேற்றினால், ஆறு மாதம் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும். தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசை இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி அமாவாசை ஆடி 19 ஆகஸ்ட் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. ஆடி அமாவாசை தினத்தில் நம்முடைய வீட்டினை சுத்தம் செய்து வீடுகளில் விளக்கேற்றி நம்மை காண வரும் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து வரவேற்பதன் மூலம் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்கள்

ஆடிப்பூரம்: 

ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். பூமா தேவியே ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்கின்றன புராணங்கள் இந்த ஆண்டு ஆடிப்பூரம் ஆகஸ்ட் 7 ஆம் நாள் ஆடி 22ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 

நாக சதுர்த்தி, நாக பஞ்சமி: 

இந்தியாவில் நாகர்களை தெய்வமாக வழிபடும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. ஆடி மாதத்தில் நாக சதுர்த்தி, நாக பஞ்சமி விழா கொண்டாடப்படுகிறது. ஆடி 23 ஆகஸ்ட் 8 நாக சதுர்த்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 9 ஆடி 24ஆம் தேதி நாக பஞ்சமியாக கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆடி 25 ஆடி சுவாதி கருடாழ்வார் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. 

கடைசி ஆடி: 

ஆடி மாதம் முதல்நாள் எப்படி சிறப்பாக கொண்டாடப்படுகிறதோ அதே போல ஆடி மாத கடைசி நாளில் நம் முன்னோர்களுக்குப் பிடித்தமானவற்றை வைத்து வணங்கி, நம் கோரிக்கைகளை சமர்ப்பிக்கவேண்டும்.  இந்த ஆண்டு ஆடி 31  ஆகஸ்ட் 16ஆம் நாள் கடைசி ஆடி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வரலட்சுமி விரதமும் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow