ஆடி மாதம் பிறந்தாச்சு.. புது வீடு பால் காய்ச்சலாமா? என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது?
Aadi Tamil Month 2024 : ஆடியில் திருமணம் செய்யலாமா, புது வீடு பால் காய்ச்சி கிரகப்பிரவேசம் செய்யலாமா என்றும் ஒருசிலர் கேட்கின்றனர். ஆடி மாதத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
ஆடி மாத சிறப்புகள்:
Aadi Tamil Month 2024 :
இறைவழிபாட்டிற்கு உரிய மாதம்:
ஆடி, புரட்டாசி, மார்கழி மாதம் ஆன்மீக வழிபாட்டிற்கு உரிய மாதமாகும். கோவில்களில் விழாக்கள் களைகட்டும். அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி மாதம். ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு சிறப்பு வாய்ந்த தினங்கள். ஆடி செவ்வாயில் பெண்கள் ஔவையார் விரதம் இருப்பார்கள். ஆடி பௌர்ணமி, ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்த நாட்கள். ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட வேண்டும். ஆடி கிருத்திகை விழா முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும். ஆடி மாதம் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும். இறை வழிபாட்டிற்காக இந்த மாதத்தினை ஒதுக்க வேண்டும் என்பதற்காகவே ஆடி மாதத்தில் திருமணங்கள் நடத்துவதில்லை.
ஆடி பட்டம் தேடி விதை:
ஆடி மாதத்தில் மழையும் காற்றும் அற்புதமாக இருக்கும். 'ஆடிப்பட்டம் தேடி விதை என்பது பழமொழி' ஆடி மாதத்தில் உழவுப்பணிகளை மேற்கொள்கின்றனர். விவசாயத்திற்காக அதிக பணம் செலவாகிவிடும் எனவே திருமணத்திற்கு பணத்தை செலவு செய்வது சிரமமாக இருக்கும் என்ற காரணத்தினாலும் ஆடியில் திருமணங்களை நடத்துவதில்லை. ஆடியில சேதி மட்டும் சொல்லி விட்டு அடுத்த மாதமான ஆவணியில் பரிசம் போட்டு திருமணம் நடத்துகின்றனர்.
ஆடியில் பிரித்து வைக்கலாமா:
ஆடி மாதத்தில்தான் அம்மனே தவமாய் தவமிருந்து இறைவனோடு இணைந்தார். இறைவனே அம்பிகையை நாடிச்சென்று இணையும் இந்த ஆடி மாதத்தில் தம்பதியரை பிரித்து வைப்பது என்பது அவர்கள் ஒன்று சேரக்கூடாது என்பதற்காக அல்ல என்றும் காலமெல்லாம் இணை பிரியாமல் வாழும் கலையைக் கற்றுத்தருவதற்காக என்றும் கூறப்படுகிறது.
விரத முறைகள் என்ன:
புதிதாகத் திருமணமாகிச் சென்ற பெண்ணை அம்பிகைக்கு உகந்த இந்த ஆடி மாதத்தில் தம் இல்லத்திற்கு அழைத்து வந்து தாயார் அவளுக்கு விரதங்களையும், பூஜை முறைகளையும் சொல்லித் தரவேண்டும். மணப்பெண் இந்த ஒரு மாதம் முழுவதும் தாய்வீட்டினில் சாஸ்திர சம்பிரதாயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆடி மாதத்தில் புதுமணப் பெண்ணை பிறந்த வீட்டிற்கு சீர் வைத்து அழைத்துச் செல்கின்றனர் .
புது வீடு குடிபோகலாமா:
ஆனி மாதத்தில் மகாபலிச் சக்கரவர்த்தி தனது ராஜாங்கத்தை இழந்து பாதாளத்திற்க்கு போன சம்பவம் நிகழ்ந்தது. ஆடி மாதத்தில் இராவண சம்ஹாரம் நடந்தது. என்று கூறப்படுவதால் இந்த மாதங்களில் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது என்று கூறுகின்றனர். அதே நேரத்தில் ஆடி மாதத்தில் சிலர் வீடு பால் காய்ச்சுகின்றனர். திடீரென வேலையில் இடமாற்றம் கிடைத்தவர்கள் வேறு வழியில்லை என்றால் வீடு பார்த்து பால் காய்ச்சுகின்றனர். காரணம் இந்த மாதத்தில் வீடு கட்ட வாஸ்து பூஜை செய்வதால் வீடு பால் காய்ச்சுவதில் தவறில்லை என்கின்றனர். ஆடி மாதத்தில் நிலம் வாங்க அட்வான்ஸ் தரலாம். புது வீடு பார்த்து வாங்குவதற்கு அட்வான்ஸ் தரலாம் என்றும் கூறுகின்றனர். ஆடி மாதத்தில் வாஸ்து நாளில் புது வீடு பால் காய்ச்சலாம். அதே போல ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளில் நிலம் சம்பந்தப்பட்ட காரியங்களை செய்யலாம். வீட்டின் உரிமையாளர் குடி போக விரும்பும் மாதத்தில் பிறந்தவர் என்றால், அந்த மாதத்தில் குடி போகக்கூடாது. சந்திராஷ்டமம், கரிநாளிலும் சுப காரியங்கள் செய்யக்கூடாது. வீடு கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது.
What's Your Reaction?