நாங்க எம்பிஏ பட்டதாரி இல்லை.. சினிமாதான் தெரியும்.. செம்பருத்தி டீ சர்ச்சைக்கு விக்னேஷ் சிவன் பதில்

Nayanthara Vignesh Shivan on Hibiscus Tea Controversy : எனக்கும் நயன்தாராவுக்கும் சினிமாதான் தெரியும், அதை தினம் தினம் கற்று வருகிறோம் என்று விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். செம்பருத்தி டீ சர்ச்சைக்கு பதிலடி தரும் வகையில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

Jul 31, 2024 - 09:25
Jul 31, 2024 - 12:23
 0
நாங்க எம்பிஏ பட்டதாரி இல்லை.. சினிமாதான் தெரியும்.. செம்பருத்தி டீ சர்ச்சைக்கு விக்னேஷ் சிவன் பதில்
Nayanthara Vignesh Shivan on Hibiscus Tea Controversy

Nayanthara Vignesh Shivan on Hibiscus Tea Controversy : நாங்கள் எம்பிஏ பட்டதாரிகள் இல்லை எனக்கும் நயன்தாராவிற்கும் சினிமாதான் தெரியும் என்று விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நயன்தாராவின் செம்பருத்தி பூ சர்ச்சைக்கு இடையில், தற்போது விக்னேஷ் சிவன் பகிர்ந்த பதிவு தான் தற்போது பேசும் பொருளாக உள்ளது. 

செம்பருத்தி பூக்களின் நன்மைகள் குறித்து பல செய்திகள் வெளியாகி வரும் நிலையில் நடிகை நயன்தாராவும் செம்பருத்தி டீயின் நன்மைகள் குறித்து பதிவிட்டிருந்தார். அதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “செம்பருத்தி டீ எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதனை எனது உணவுத் திட்டத்தில் ஒரு பகுதியாக்கியவர் ஊட்டச்சத்து நிபுணர் கனேரிவால். இது நீண்ட காலமாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதில் அதிகம் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க உதவிகரமாக இருக்கும்.

இது உடலுக்கு மிகவும் குளிர்ச்சித் தரக்கூடியது என்பதால் முகப்பரு உள்ளிட்ட சருமம் தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும். இதில் வைட்டமின்கள் அதிகம் நிரம்பியுள்ளதால் செம்பருத்தி தேநீர் மழைக்காலத்துக்கு மிகவும் சிறந்தது. மேலும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை சமநிலையில் வைத்திருக்கும். ஆன்டிபாக்டீரியல் என்பதால் பருவகால தொற்று நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது” என்று நயன்தாரா பதிவிட்டிருந்தார்.இந்தப் போஸ்ட்டை பார்த்த நயனின் ரசிகர்கள் சூப்பர் தகவல், நாங்கள் கண்டிப்பாக ட்ரை பண்ணுகிறோம் என்று நயனை பாராட்டி பதிவிட்டு இருந்தனர்.


இந்நிலையில், அவரது இந்த பதிவை கல்லீரல் சிகிச்சை நிபுணர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் என்பவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பிரபல திரைப்பட நடிகை நயன்தாரா, சமந்தாவை விட இரண்டு மடங்கு அதிகமான ஃபாலோவர்ஸ்களை கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட 8.7 மில்லியன் ஃபாலோவர்களை செம்பருத்தி டீ குடிக்க கோரியுள்ளார். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், பாக்டீரியா எதிர்ப்பு, தொற்று நோய், முகப்பரு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு செம்பருத்தி டீ பயனாக இருக்கும் என்ற அவரது கூற்று எதுவும் மருத்துவ ரீதியாக நிரூபணம் ஆகவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

நயன்தாராவின் இந்தப் பதிவு அவரது "பிரபல ஊட்டச்சத்து நிபுணருக்கான" விளம்பரம் போலவும் தெரிகிறது. எதைப் பற்றியும் தெரியாமல் தவறான தகவல்களால் தனது ஃபாலோவர்ஸ்களை தவறாக வழிநடத்துகிறார். செம்பருத்தி தேநீரின் நன்மைகள் குறித்து போதுமான ஆதாரங்கள் இல்லாததால், அதனை யாரும் தொடர்ச்சியாக உட்கொள்ள வேண்டாம்” என பதிவிட்டு, அதற்கான காரணங்களையும் விவரித்துள்ளார். 

இதனையடுத்து நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “முட்டாள்களுடன் ஒருபோதும் வாக்குவாதம் செய்யாதீர்கள், அவர்கள் உங்களை தங்கள் நிலைக்கு இழுத்துவிடுவார்கள் என பதிவிட்டுள்ளார். முன்னதாக, இதே மருத்துவர் நடிகை சமந்தாவின் ஹைட்ரஜன் பெராக்சைடு பயன்பாடு தொடர்பான பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்திருந்தார். தற்போது நயன்தாரா பதிவிற்கும் விமர்சனம் செய்துள்ளார் கல்லீரல் நிபுணர் சிரியாக் அப்பி பிலிப்ஸ்.

இதனிடையில் நயன்தாரா நடிப்பு மட்டுமின்றி, பல பிசினஸ்களை செய்து வருகிறார். அவர் தனது அழகு பிராண்டையும் 9 ஸ்கின் என்ற பெயரில் தொடங்கினார். தி லிப்பாம் என்ற நயன்தாராவின் மற்றொரு முயற்சியாகும். ஃபெமி 9 என்ற பெயரில் சானிட்டரி பேட் நிறுவனத்தையும் தொடங்கினார். மேலும், சில உணவு நிறுவனங்களுக்கு ஃபண்டிங் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுபோல் பல பிசினஸ்களை செய்கிறார். இந்நிலையில் நடிகர்களுக்கு இதுபோல் பிசினஸ் குறித்து என்ன தெரியும், அவர்களுக்கு அது குறித்து என்ன பகுத்தறிவு இருக்கும் என்ற கேள்விகள் எல்லாம் எழுப்பப்பட்டது.

தற்போது செம்பருத்தி டீ சர்ச்சைக்கு பிறகு, விக்னேஷ் சிவன் எல்லாவற்றிற்கும் அவரின் பதிவில் பதில் அளித்துள்ளார். அதில், ‘ நாங்கள் எம்பிஏ பட்டதாரிகள் இல்லை. எனக்கும் நாங்கள் சினிமா தான் தெரியும். அதை தினமும் நாங்கள் கற்றுக்கொள்கிறோம். நாங்கள் எப்படி எங்கள் பிசினஸ்களை மேனேஜ் செய்கிறோம் என்றால் டாக்டர் வேலுமணி போன்றோரின் மகத்தான அறிவு மற்றும் விலைமதிப்பற்ற அனுபவத்தினால் தான் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நாங்கள் எப்போதும் சரியான விஷயங்களை தான் செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறோம் என்றவாறு குறிப்பிட்டுள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த பதிவு தற்போது அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow