வெற்றி நிச்சயம்.. கொடிக்கு பின்னாடி வரலாறு இருக்கு.. சஸ்பென்ஸ் வைத்த தவெக தலைவர் விஜய்

இது வெறும் கட்சிக்கான கொடி அல்ல. தமிழ்நாட்டின் வெற்றிக்கான கொடியாக பார்க்கிறேன் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். இந்த கொடிக்கு பின்னால் ஒரு வரலாறு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்.

Aug 22, 2024 - 12:17
 0
வெற்றி நிச்சயம்.. கொடிக்கு பின்னாடி வரலாறு இருக்கு.. சஸ்பென்ஸ் வைத்த தவெக தலைவர் விஜய்
tvk vijay flag history

புயலுக்கு பின் அமைதி என்பது போல, இந்த கொடிக்கு பின்னும் ஒரு வரலாறு இருக்கிறது. அதுவரைக்கும் சந்தோஷமா கெத்தா கொண்டாடுவோம். இது வெறும் கட்சிக்கான கொடி அல்ல. தமிழ்நாட்டின் வெற்றிக்கான கொடியாக பார்க்கிறேன். இதுவரைக்கும் நமக்காக உழைத்தோம். இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டுக்காகவும் உழைப்போம்.

பனையூர் அலுவலகத்தில் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார் விஜய். சிவப்பு, மஞ்சள் பின்னணியில் இரண்டு போர் யானைகள்  நடுவில் வாகைமலர்  இடம் பெற்றுள்ளது.பனையூர் அலுவலகத்தில் கட்சி கொடியை கம்பத்தில் ஏற்றி வைத்தார் விஜய். பின்னர் த.வெ.க. கொடி பாடலும் வெளியிடப்பட்டது. இந்த பாடல் தமிழன் கொடி பறக்குது என்று தொடங்குகிறது.

தலைவன் கொடி.. தருமக் கொடி.. தரையின் கொடி.. வீரக் கொடி.. விஜயக் கொடி.. ஆதிக்குடி காக்கும் கொடி.. தமிழன் கொடி என்று தர்மத்தை காக்கும் கொடியாகவும் நிலத்தை காக்கும் கொடியாகவும் வீரம் மற்றும் வெற்றி கொடியாக ஆதிக்குடியான தமிழ்க்குடியை காக்கும் கொடியாகவும் தவெக கொடி இருக்கும் என்று வரிகளில் பிரதிபலிக்கின்றன. அதோடு பாடலில் இடம்பெறும் காட்சிகளில் விஜய் வாளை ஏந்துவது போல இடம்பெற்றுள்ளது. விஜய்யின் பூச நட்சத்திரத்திற்கு வாள் என்பது சாதகமான அம்சமாகும்.  வாள் ஏந்துவது என்பது போருக்கு தயாராகும் போர்வீரனின் அடையாளம். எனவே விஜய் அரசியல் போருக்கு தான் தயாராகிவிட்டதாக வெளிப்படையாக அறிவித்துவிட்டார்.

அரசர கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி அன்னைக்கே சொன்னோமே இது ஆளப்போற தமிழன் கொடி... என்று ஆட்சியாளர்களை கேள்விக் கேட்கும் தளபதியாக விஜய் உருவெடுத்துள்ளதாகவும், விஜய் விரைவில் நாட்டை ஆளப்போவதாகவும் வரிகள் இடம்பெற்றுள்ளன.

கொடி ஏற்றி வைத்து உறுதி மொழி எடுத்துக்கொண்ட விஜய், ‘நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை  போற்றுவேன். நமது அன்னை தமிழ் மொழியை காக்க உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில், தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவரிடமும் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணி காக்கின்ற பொறுப்புள்ள தனி மனிதராக செயல்படுவேன் என்று கூறினார். 

இதைத்தொடர்ந்து பேசிய தவெக தலைவர் விஜய் “இன்று நாம் எல்லாருக்கும் சந்தோஷமான நாள். நீங்கள் ரொம்ப நாள் வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க. என் நெஞ்சில் குடியிருக்கும் என் தோழர்களாகிய உங்கள் முன்னாடியும் சரி, தமிழக மக்கள் முன்னாடியும் சரி கொடியை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. 

இந்த கொடிக்கான விளக்கத்தை கண்டிப்பாக சொல்வேன். புயலுக்கு பின் அமைதி என்பது போல, இந்த கொடிக்கு பின்னும் ஒரு வரலாறு இருக்கிறது. அதுவரைக்கும் சந்தோஷமா கெத்தா கொண்டாடுவோம். இது வெறும் கட்சிக்கான கொடி அல்ல. தமிழ்நாட்டின் வெற்றிக்கான கொடியாக பார்க்கிறேன். இதுவரைக்கும் நமக்காக உழைத்தோம். இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டுக்காகவும் உழைப்போம். இது உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் நான் சொல்லாமலே கொண்டாடுவீங்கன்னு எனக்கு தெரியும். அனைவரையும் மீண்டும் சந்திக்கிறேன். வெற்றி நிச்சயம். நம்பிக்கையுடன் இருங்கள் என்று தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow