Trichy SP Varunkumar : ஆபாச தாக்குதல்களை விடப்போவதில்லை.. சீமான் மீது மான நஷ்ட வழக்கு தொடரும் திருச்சி எஸ்.பி வருண்குமார்

Trichy SP Varunkumar X Post : நாம் தமிழர் கட்சியின் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் 2 பொறுப்பாளர்கள் மீது மான நஷ்ட வழக்கு (Civil & Criminal Defamation) தொடர உள்ளேன் எந்தவித சமரசமும் இன்றி இந்த சட்ட நடவடிக்கையை மேற்கொள்வேன் என்று திருச்சி எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ் கூறியுள்ளார்.

Aug 24, 2024 - 10:41
Aug 24, 2024 - 13:47
 0
Trichy SP Varunkumar : ஆபாச தாக்குதல்களை விடப்போவதில்லை.. சீமான் மீது மான நஷ்ட வழக்கு தொடரும் திருச்சி எஸ்.பி வருண்குமார்
trichy sp varunkumar ips

Trichy SP Varunkumar X Post : திருச்சி எஸ்பி வருண்குமார் குறித்து அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எக்ஸ் தளத்தில் பல பேக் ஐடிக்கள் அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆபாசமாக சித்தரித்து வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து ஆபாச சித்தரிப்பில் ஈடுபடும் இந்த கணக்குகளை ஆராயும்போது இவை அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரில் தொடங்கி மாநில பொறுப்பாளர்கள் வரை முக்கிய நிர்வாகிகளின் தூண்டுதலால் இயக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது என கூறியுள்ளார் வருண் குமார் ஐபிஎஸ்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நான் வருண்குமார் வீரசேகரன் IPS. பல் மருத்துவருக்கான படிப்பை முடித்திருந்தாலும் காவல்துறை மேல் உள்ள பற்று காரணமாக 2010-ம் ஆண்டு UPSC குடிமைப்பணிகள் தேர்வு எழுதினேன்.அதில், அகில இந்திய அளவில் 3-ம் இடத்தை பிடித்திருந்தாலும், IPS -ஐ தேர்ந்தெடுத்தேன். 2011-ம் ஆண்டு IPS தேர்வாகி பயிற்சி முடித்து உதவி காவல் கண்காணிப்பாளராக அருப்புக்கோட்டை, திருப்பத்தூர் மற்றும் அதிதீவிரப்படை, சென்னையிலும் பணிபுரிந்தேன். பின்னர் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று குடிமைபொருள் நுண்ணறிவு பிரிவு, இராமநாதபுரம் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம், சென்னையில் அலுவலக தானியங்கி மற்றும் கணினிமயமாக்கல் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, மதுரை மண்டலம் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்துள்ளேன். 

தற்போது திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த வருடமாக பணிபுரிகிறேன். எனது 13 ஆண்டுகால IPS வாழ்க்கையில் எல்லா ஆண்டுகளிளும் Outstanding Rating மட்டுமே உயர் அதிகாரிகளிடம் இருந்து இதுவரை பெற்றுள்ளேன். ஒரு இன்று ஒரு மாவட்ட பொறுப்பில் இருந்தாலும்கூட, இராமநாதபுரத்தில் ஒரு எளிமையான பின்னணியில் இருந்து வந்தவன் நான். எனது தகப்பனார் வழி தாத்தா ஒரு தபால் காரராக பணிபுரிந்தார். எனது தாய்வழி தாத்தா திருச்சியில் விவசாய விதை வியாபாரம் செய்து வந்தார். 

இப்பேர்ப்பட்ட சாமானிய சூழலிலிருந்து வந்த நான் பெண்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள் போன்ற சாமானியர்களின் பிரச்சனைகளைப் முனைப்பில் செயலாற்றி வருகிறேன். 2021ஆம் ஆண்டு YouTuber ஒருவர் ஒரு அரசியல் கட்சி பின்புலத்தோடு பொய் செய்திகளைப் பரப்பி திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தினார். அப்போது, திருவள்ளுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த நான் அந்த YouTuber-ஐ கைது செய்து, பிரச்சனையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு குண்டர் சட்டத்தில் அடைத்தேன். 


சமீபத்தில், அதே YouTuber பதிவு செய்த சர்ச்சையான அவதூறுகளால் Cyber Crime காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். சட்ட அடிப்படையில் பணியாற்றியதற்காக, அந்த YouTuber சார்ந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் என்னைக் கடுமையாகச் (சில சாதி பெயர்களைக் குறிப்பிட்டு) சாடினார்.அது விமர்சனத்தையும் தாண்டி தீவிர அவதூறு கோணத்தில் இருந்தது. எனவே, அதற்கு எதிராக Civil and Criminal Defamation Notice என் வழக்கறிஞர் மூலம் அந்த கட்சியின் அனுப்பினேன். 

ஒருங்கிணைப்பாளருக்கு நான் சட்டப்படி இந்த Notice அனுப்பிய ஒரே காரணத்திற்காக என்னைத் தாண்டி என் குடும்பத்தினர்கள், பெண்கள், குழந்தைகள் என என்னைச் சார்ந்தவர்கள் மீது வசைகளையும், ஆபாசமான, அவதூறான செய்திகளையும், அருவருப்பான வாக்கியங்களுடன் பரப்பினர். X தளத்தில் என் குழந்தைகள் மற்றும் என் குடும்ப பெண்களின் புகைப்படங்களும் தரம்தாழ்ந்து ஆபாசமாகச் சித்தரிக்கப்பட்டது. இது ஒரு கட்டத்தில் என் குடும்பத்தினருக்கே கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு அச்சுறுத்தலாக உருமாறியது. இவற்றில் ஈடுபட்ட ஒருசில X கணக்குகளைக் கீழே குறிப்பிட்டுள்ளேன்.

இவ்வாறு தொடர்ந்து ஆபாச சித்தரப்பில் ஈடுபடும் இந்த கணக்குகளை ஆராயும்போது இவை அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரில் தொடங்கி மாநில பொறுப்பாளர்கள் வரை முக்கிய நிர்வாகிகளின் தூண்டுதலால் இயக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில், இவை அனைத்தும் போலிக் கணக்குகளாகவும் தொடர்ந்து இதே வேலையைச் செய்து வருபவையாகவும் உள்ளன. அதிலும் பல போலி கணக்குகள் அந்த கட்சியின் தூண்டுதலின் காரணத்தினாலேயே வெளிநாடுகளில் வாழும் தமிழ் தெரிந்த நபர்களுக்கு பணம் கொடுத்து ஆபாச பதிவுகளை பதிவிட உத்தரவிட்டதாக தெரியவருகிறது. நான் இந்த விசயத்தில் அளித்த 3 புகார்களில் 3 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு Cyber Crime Wing போலீசார் இதனை விசாரித்து வருகிறார்கள்.


நானும் எனது மனைவி மரியாதைக்குரிய திருமதி. வந்திதா பாண்டே IPS அவர்களும் தமிழ்நாட்டில் மத்திய காவல் மண்டலத்தில் முக்கிய இரு மாவட்டங்களில் (திருச்சி, புதுக்கோட்டை) காவல் கண்காணிப்பாளர்களாக பணிபுரிகிறோம். இந்த சவாலான பணியில் நேர்மையாகக் கடமையாற்றினால் மக்களின் நன்மதிப்புகளோடு ஒருசிலரின் பகையையும் சம்பாரிக்க நேரிடும் என்பதை நாங்கள் அறிவோம். பொது வாழ்வில் இருக்கும் எங்களுக்கு இதுபோன்ற தொடர் ஆபாச தாக்குதல்கள் ஒரு பொருட்டே அல்ல. என்னதான் காவல்துறையில் உயர் பொறுப்பில் இருந்தாலும் நாங்களும் சராசரி மனிதர்கள்தான். ஒரு சாதாரண தகப்பன் மற்றும் தாயாக இது எங்கள் குழந்தைகளையும், குடும்பத்தினரையும் ஓரு அளவிற்கு பாதித்துள்ளது. 

நிஜவாழ்வில் பலரை எதிர்கொள்ளும் சூழலில் இந்த இணையக் கூலிப்படையை எதிர்கொள்வது எங்களுக்கு பொருட்டல்ல. ஆனால், ஒரு சராசரி குடும்ப நபராக எங்கள் மூன்று குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மீதான அக்கறைக்காக இந்த X இணைய உரையாடல்களிலிருந்து தற்காலிகமாக நானும் எனது மனைவி அவர்களும் விலக முடிவு செய்துள்ளோம். எங்களது இந்த முடிவு தற்காலிகமானது என்றபோதும் நாங்கள் இதை பயத்தினாலோ அருவருப்பினாலோ மேற்கொள்ளவில்லை. போலிக் கணக்குகள் மூலம் பெண்களை ஆபாசமாகச் சித்தரிக்கும் (Morphing) குழந்தைகளுக்குக் கொலை மிரட்டல் விடும் வக்கிர புத்தியும் கொடூர எண்ணமும் கொண்டவர்கள் தான் இதற்கு அவமானப்பட வேண்டும். 

எங்கள் கையில் உள்ள பொறுப்பு, மக்கள் எங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை, நாங்கள் மேற்கொண்டு வரும் பணியின் பொருட்டு இதுபோன்ற குறுக்கீடுகளைப் புறந்தள்ளுகிறோம். முகம் தெரியாத கோழைகளுக்கும் இணையக் கூலிப்படைகளுக்கும் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமோ தேவையோ இல்லை. ஒரு காவல்துறை அதிகாரியாக நான் எனது கடமையை செய்ததற்கு எனது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரைத் தாக்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது? அது என்னை நேரடியாகவோ சட்டரீதியாகவோ எதிர்கொள்ள முடியாத கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடாகவே பார்க்கிறேன். 

அதேநேரத்தில், ஒரு சாதாரண குடிமகனாக இணையத்தில் எழுந்துள்ள இதுபோன்ற கூலிப்படை தாக்குதலைக் கண்டு மிகவும் அக்கறையும்,அறச்சீற்றமும் கொள்கிறேன். மாவட்ட கண்காணிப்பாளராக உள்ள பெண்ணையே இவர்கள் இந்தளவிற்குத் தாக்குகிறார்கள் என்றால் சாதாரண மக்களையும், பெண்களையும் என்ன செய்வார்கள்?.. இன்றுவரை பதிவிட்ட எந்த ஆபாச பதிவுகளையும் நீக்கவில்லை, வருத்தம் தெரிவிக்கவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை எனும்போது இந்த கூட்டத்திற்குச் சட்டத்தின் முன் தகுந்த பாடம் புகட்ட வேண்டியுள்ளது. இது சம்பந்தமாக சைபர் கிரைமில் மூன்று குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணையும், கைது நடவடிக்கையும் தொடரும். 

இதில் ஈடுபட்ட நபர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனைப் பெற்றுத் தருவது உறுதி. ஒரு குடும்ப நபராகவும் காவல் அதிகாரியாகவும் சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் சமூக விரோத கும்பல்களின் செயற்பாட்டை முறியடிப்பது எனது கடமை. இது போன்ற தாக்குதல்களுக்கு ஆளாகும் சாமானிய மக்கள் எந்தவித அச்சத்திற்கும் ஆட்படாமல் தானாக முன்வந்து புகார் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஆபாசம் மற்றும் அவதூறு பரப்பிய அனைத்து போலி கணக்குகளையும் அதன் பின் ஒளிந்து கொண்டு ஆபாசம் பரப்பும் விஷமிகளையும் அவர்களை கூலிக்காக தூண்டிவிடும் அந்த கட்சி பொறுப்பாளர்களையும் Tamil Nadu Prohibition of Harassment of Women Act 1998, Information Technology Act 2000, சட்டம் 2023 மற்றும் பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு சட்டம் 2023-ன் படி வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நிறுத்துவேன் என்பதில் மிகவும் முனைப்புடன் இருக்கிறேன். 

ஒருங்கிணைப்பாளர் மற்றும் இதுபோக இந்த கட்சியின் பொருப்பாளர்கள் மீது மானநஷ்ட 2 வழக்கு (Civil & Criminal Defamation) தொடர உள்ளேன். எந்தவித சமரசமும் இன்றி இந்த சட்ட மேற்கொள்வேன். நடவடிக்கைகளை தொடரந்து எனது பரிந்துரை / விழிப்புணர்வு Online Abuse என்பது சட்டத்தின் இரும்பு கரங்களால் ஒடுக்கப்படவேண்டிய ஒன்று. அதைப் பொருத்துக்கொள்ள வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை, குறிப்பாக பெண்களுக்கும். குழந்தைகளுக்கும் அறவே இல்லை.

உங்கள் அருகாமையில் உள்ள Cyber Crime காவல் நிலையத்தில் Online Abuse பற்றிய புகார்களை உடனடியாக எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யவும். மேலும் National Commission for Women உதவி எண் 7827170170, இதர உதவி எண்கள் 100, 112, 181. 1091, 1098, 1930 மற்றும் https://cybercrime.gov.in (NCRP Portal) சமூக வலைத்தளங்கள் இன்று குழந்தைகள் உட்பட அனைவரும் பயன்படுத்தும் சூழலில், நாம் அதில் இதுபோன்ற அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். நன்றி." என கூறியுள்ளார் வருண்குமார் ஐபிஎஸ்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow