தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும் முன்பாகவே வெயிலும் பல ஊர்களில் சுட்டெரித்து வருகிறது. நாளை 12ஆம் தேதி முதல் 2 வாரங்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 17ஆம் தேதி வரைக்கும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 12.09.2024 முதல் 16.09.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டில் கோடைக்காலம் முடிந்தும் வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மதுரை, தொண்டி உள்ளிட்ட 7 இடங்களில் நேற்றைய தினம் 100°F க்கும் மேல் வெப்பநிலை பதிவானது. மேலும் 2 வாரங்களுக்கு வெயில் சுட்டெரிக்கலாம் என தகவல் தெரிவித்துள்ளனர். சத்தீஷ்கரில் நிலவும் காற்றழுத்த பகுதியால் தென் இந்திய தீபகற்ப பகுதிகளில் காற்றில் ஈரப்பதம் குறைந்துள்ளதால் வெப்பம் அதிகரித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.