அயலக மண்ணிலும், அரசுப் பணி தொடர்கிறது.. அமெரிக்காவில் ஆபிஸ் ஃபைல் பார்க்கும் முதல்வர்
அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ ஆபிஸ் வழியே பணி தொடர்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்தாலும் அரசு பணிகளும் தொய்வின்றி தொடர்வாக கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அரசு முறை பயணமாக கடந்த மாதம் 27ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். தொடர்ந்து 17 நாட்கள் அமெரிக்காவில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலில் சான் பிரான்சிஸ்கோ நகரில் தொழில் முதலீடுகளை ஈர்த்த முதலமைச்சர், பின்னர் சிகாகோ சென்று அங்குள்ள முக்கிய தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசி வருகிறார்.
தமிழக வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அமெரிக்கவாழ் தமிழர்கள், தமிழ்சங்கங்கள் சார்பில் ஏற்படு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
சிகாகோவில் இருந்தாலும் தமிழ்நாட்டில் நடைபெறும் சம்பவங்களை தொடர்ந்து கண்காணித்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக வலைதளங்கள் வாயிலாக அனைத்து நிகழ்வுகளுக்கும் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அந்தவகையில் நேற்றைய தினம் அசோக் நகர் பள்ளியில் சர்ச்சைகுரிய வகையில் ஆன்மிக சொற்பொழிவாற்றிய விவகாரம் தொடர்பாகவும் கருத்து தெரிவித்திருந்தார். உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று இ-ஆபிஸ் வழியாக அரசு கோப்புகளில் கையெழுத்திடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் #e_office வழியே பணி தொடர்கிறது...” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்பயணத்தின் போது, அமெரிக்க நாட்டின் சிகாகோவில் BNY மெலன் (The Bank of New York Mellon Corporation) வங்கியின் உயர் அலுவலர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோவில் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.
BNY மெலன் வங்கி உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகும். இவ்வங்கி நிதி பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டதாகும். இந்த வங்கி சொத்து சேவை, கருவூல சேவை, முதலீடுகள் மேலாண்மை போன்ற சேவைகளை அமெரிக்க நாட்டின், நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவருகிறது. இந்தியாவிலும் இவ்வங்கிக்கு பல கிளைகள் உள்ளன.
தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தவும் அதிநவீன தொழில் நுட்பத்தை வங்கி சேவைகளில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு தமிழ்நாட்டு அரசுடன் இணைந்து வங்கி சேவைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். BNY மெலன் வங்கி தனது ஆறு முக்கிய மையங்களில் ஒன்றாக சென்னையை தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் அதிகளவு கணினி பொறியியல் படித்த மாணவர்கள் உள்ளதால் சென்னையில் சர்வதேச தரத்தில் பயிற்சி மையம் அமைத்திடவும், தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கும், மென்பொருள் மேலாண்மை மற்றும் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
What's Your Reaction?