டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்.. சுப்ரீம் கோர்ட் நீதிபதி சொன்ன காரணம்
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதை கருத்தில் கொண்டு ஜாமின் தரப்பட்டுள்ளதாக நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.
மதுபான கொள்கை முறைகேடு
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் மீது அமலாக்க துறையினரால் தொடரப்பட்ட வழக்குக்கு எதிராக, அரவிந்த் கெஜ்ரிவால் மனு அளித்திருந்தார். இம்மனுவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளான சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் பிரிவு 19-ன் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததன் மூலம் கெஜ்ரிவாலை கைது செய்ததில் அமலாக்கத்துறை தவறு செய்ததாக குற்றம் சாட்டி இருந்தார்.
இடைக்கால ஜாமின்
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான வாத விவாதங்கள் கடந்த மே மாதம் நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும் ஜாமின் கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு உச்சநீதிமன்றத்திற்கு மனு அனுப்பியிருந்தது. இதன்படி மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று ( ஜூலை 12) இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.
மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை பதவி நீக்கம் செய்ய உச்சநீதிமன்றத்தால் முடியாது என ஜாமின் அளித்த நீதிபதி தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் 90 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம் நீதிபதி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக, உள்ள கெஜ்ரிவால் தனது பதவியில் (முதல்வர்) நீடிக்க விரும்புகிறாரா இல்லையா என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
எதிர் கட்சிகள் கொடுத்த அழுத்தம்
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரை பதவியிலிருந்து வெளியேற்றுவதில் எதிர்கட்சியான பாஜக கடுமையாக போராடியது. மேலும் ஊழல் வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டுமென போராட்டம் நடத்தியது. ஆனால் அரவிந்த கெஜ்ரிவால் ஆதரவாளர்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏற்கனவே டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில், டெல்லி அமலாக்கத்துறையின் காவலில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நிதிமன்றம் கடந்த ஜூன் மாதம் ஜாமின் வழங்கியது. இதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அப்போதே இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?