பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்.. கோவை ஈஷா யோகா மைய மருத்துவர் போக்சோ வழக்கில் கைது
கோவை தொண்டாமுத்தூர் அரசு பள்ளியில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கோவை ஈஷா யோக மையம் மருத்துவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை மாநகரில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஈஷா யோகா மையம். சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் இந்த யோகா மையம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஈஷா யோகா மையத்தின் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகள் செய்து வருகின்றனர். அதில் மருத்துவ முகாம்கள் அமைத்து, நடமாடும் மருத்துவ முகாம்கள் போன்ற இலவச முகாம்கள் அமைத்து இலவச மருத்துவ பரிசோதனைகள், மருந்துகள் போன்ற சேவைகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் நலத் துறையினர் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அங்கு நடந்த முகாமின் போது மாணவிகளுக்கு மருத்துவர் சரவணன் மூர்த்தி என்பவர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக கூறி உள்ளனர்.
இதைத் தொடர்ந்து குழந்தைகள் நலத் துறையினர் பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினரிடம் அளித்த புகாரின் பேரில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மருத்துவர் சரவணன் மூர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியில் எஸ்சிசி முகாம் என்ற பேரில் போலியாக முகாம் நடத்தி பல பள்ளி மாணவிகளை பாலியல் வன் கொடுமை செய்யதாக சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது செய்யப்பட்டார். சிறையில் அந்த நபர் தற்கொலை செய்து செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. இந்த நிலையில் தற்போது மருத்துவ முகாம் நடத்த வந்த மருத்துவர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
What's Your Reaction?