Adani Hindenburg : ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி.. பங்குச்சந்தையில் அதானி பங்குகள் கடும் சரிவு..எவ்வளவு நஷ்டம் தெரியுமா?
Adani Group Stocks Fall After Hindenburg Report : அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையால் பங்கு மதிப்பில் வீழ்ச்சியைக் காட்டியதோடு, இதனால் பெரும் இழப்பை எதிர்கொண்ட அதானி குழுமம், பணக்காரப் பட்டியலிலும் இறக்கத்தைச் சந்தித்தது. மேலும், இவ்விவகாரம் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது.
Adani Group Stocks Fall After Hindenburg Report : வாரத்தின் முதல் நாளான இன்று (ஆக.12) இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 409 புள்ளிகள் சரிந்து 79,296 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 47 புள்ளிகள் குறைந்து 24,320 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அதானி குழுமத்தின் மீதான வழக்கை செபி எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கட்டும் என உச்சநீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து, கடந்த 1.5 வருடமாக இதுகுறித்து செபி விசாரணை செய்துவந்த நிலையில், தற்போது ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்திற்கு செபி விளக்கம் கேட்டு கடந்த ஜூலை மாதம் ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியது. அதேநேரத்தில், செபியின் நோட்டீஸ் பெற்ற பின்னர் ஹிண்டன்பர்க் ரிசர்ச் மீண்டும் ஒரு பகீர் குற்றச்சாட்டைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து ஹிண்டன்பர்க், “இந்தியாவில் மிகவும் சக்திவாய்ந்த நபர்கள் செய்த ஊழல் மற்றும் மோசடிகளை அம்பலப்படுத்துபவர்களை அமைதியாக்கும் மற்றும் மிரட்டும் முயற்சியாகவே செபி ஷோகாஸ் நோட்டீஸை எங்களுக்கு அனுப்பியுள்ளது. மோசடியாளர்கள் மீது தான் செபி போன்ற அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் என பலரும் நினைக்கலாம். ஆனால் இங்கு மாறாக, செபி இத்தகைய மோசடி நடைமுறைகளை வெளியுலகத்திற்குக் கொண்டு வருபவர்கள் மீது செபி அதிக ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது” எனக் குற்றஞ்சாட்டியிருப்பதுடன், இந்த விவகாரத்தில் கோட்டக் மஹிந்திரா வங்கியையும் சேர்த்தது.
இந்த நிலையில் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த 10ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில், "விரைவில் இந்தியாவில் பெரிய சம்பவம் நடைபெற இருக்கிறது" என்று பதிவிட்டது. அதனைத் தொடர்ந்து, அதானி குழும ஊழல் குறித்து மேலும் ஓர் அதிர்ச்சிக்குரிய தகவலை ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டது. அதில், அதானி குழும ஊழல் புகாரில் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில், இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை கட்டுப்பாட்டு ஆணையமான செபியின் தலைவர் மாதபி புரி புச் (Madhabi Puri buch) தனது கணவருடன் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்ததாக தெரிவித்திருந்தது.
இந்த அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தங்கள் எக்ஸ் வலைத்தள கணக்கை செபி லாக் செய்து வைத்துள்ளது. அதேநேரத்தில், இந்தக் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்திருந்தது.செபியின் தலைவர் மாதபி புரி புச்சும் மறுப்பு தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று (ஆக.12) இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 409 புள்ளிகள் சரிந்து 79,296 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 47 புள்ளிகள் குறைந்து 24,320 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழுமத்தின் அனைத்து நிறுவன பங்குகளும் சரிவுடன் தொடங்கியுள்ளது. இதன்படி அதானி என்டர்பிரைசஸ், அதானி, போர்ட்ஸ், அதானி பவர், அதானி என்ர்ஜி உள்ளிட்ட பங்குகளின் விலை சரிவை கண்டு வருகிறது. சுமார் 7 சதவீதம் வரை அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்தன.
What's Your Reaction?