நீட் தேர்வு வினாத்தாள் கசிவு.. மறுதேர்வு கடைசி வாய்ப்பு தான்.. உச்சநீதிமன்றம்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவினால் 20 லட்சம் மாணவர்களின் உழைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.தவறு செய்த மாணவர்களை அடையாளம் காண மத்திய அரசும், தேசியத் தேர்வு முகமையும் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? என்றும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த ஆண்டு, இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை, கடந்த மே 5-ஆம் தேதி நடத்தியது. நாடு முழுவதும் 4,750 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 4ம் தேதியே முடிவுகள் வெளியாகின.
இந்த ஆண்டு 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண் பெற்றிருந்தனர். அதிலும், ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 6 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. நீட் வினாத்தாள் கசிவு குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை முன் வைத்தார்.நீட் தேர்வில் முறைகேடு நடந்தது உண்மை தேர்வின் நம்பகத்தன்மை சமரசம் செய்யப்பட்டுள்ளது.நீட் தேர்வுத்தாள் கசிவு பெருமளவில் நடந்திருக்கலாம் என்பதில் சந்தேகமில்லை.டெலிகிராம், வாட்ஸ்அப் மூலம் தேர்வுத்தாள் கசிந்தது எனில், காட்டுத்தீ போல் வினாத்தாள் பரவியிருக்க வேண்டும்.
20 லட்சம் மாணவர்களின் உழைப்பு பாதிக்கப்பட்டுள்ளது.2 மாணவர்கள் மட்டும் முறைகேட்டில் ஈடுபட்டதால் முழு தேர்வையும் ரத்து செய்ய முடியாது.
மறுதேர்வு குறித்து உத்தரவிட வேண்டுமெனில் 24 லட்சம் மாணவர்களின் நிலையை கருத்தில் கொள்வது அவசியம்.கல்வி அட்டவணை, பயண செலவு உள்ளிட்டவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.
எந்த நேரத்தில் எந்தெந்த முறைகளில் வினாத்தாள் கசிந்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.67 மாணவர்கள் 270 மதிப்பெண்கள் எடுத்தது எப்படி?
தவறு செய்த மாணவர்களை அடையாளம் காண மத்திய அரசும், தேசியத் தேர்வு முகமையும் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
வினாத்தாள் கசிவு காரணமாக எத்தனை மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன?
தனது குழந்தைகளை மருத்துவராக்கத் துடிக்கும் ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தினரின் ஆசையை நிறைவேற்றும் மதிப்புமிக்க கல்வி கட்டமைப்பு முறையாக கையாளப்பட வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார். செயற்கை நுண்ணறிவு, சைபர் தடயவியல் பிரிவை பயன்படுத்தி குற்றம் இழைத்தோரை கண்டுபிடிக்க முடியுமா என ஆராயலாம். முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களை முறையாக கண்டுபிடிக்க முடியவில்லை எனில் மறுதேர்வுக்கு உத்தரவிடலாம் - உச்சநீதிமன்றம்
குறிப்பிட்ட தேர்வு மையங்களில் முறைகேட்டில் ஈடுபட்டோர் கண்டறியப்பட்டால், நாடு முழுவதும் நடத்தப்பட்ட தேர்வை மறுபரிசீலனை செய்ய உத்தரவிடுவது சரியாக இருக்காது.வினாத்தாள் கசிவின் தன்மை, வினாத்தாள் கசிந்த இடம், வினாத்தாள் கசிவு தேர்வு நடத்துவதற்கு இடையேயான காலதாமதம் குறித்து NTA பதிலளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான முழுத் தகவல்களை NTA வழங்க வேண்டும் நிபுணர்களைக் கொண்ட பல்துறைக் குழுவைக் கொண்டு விசாரணை நடத்தலாம்."நீட் மறுதேர்வு கடைசி வாய்ப்பு தான் விசாரணை உரிய முறையில் நடத்தப்பட வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.நீட் முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சிபிஐயும் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என உத்தரவித்த நீதிபதிகள் NTA, மத்திய அரசு, CBI பதிலளிக்கக் கோரி வழக்கை ஜூலை 11ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
What's Your Reaction?