மருத்துவ மாணவி படுகொலை: வலுக்கும் போராட்டம்.. மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு!

மருத்துவ மாணவி படுகொலை தொடர்பாக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 3வது நாளாக விசாரணைக்கு ஆஜரான அவரிடம் மருத்துவ மாணவி மரணம் எப்போது தெரியவந்தது? அதன்பின்பு என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது.

Aug 18, 2024 - 13:50
 0
மருத்துவ மாணவி படுகொலை: வலுக்கும் போராட்டம்.. மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு!
Medical Student Killed

டெல்லி: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த 9ம் தேதி பணியில் இருந்த முதுநிலை மருத்துவ மாணவி, சிலரால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஒரு குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக சிபிஐ  விசாரணை மேற்கொண்டு வருகிறது. மருத்துவ மாணவி படுகொலையில் அவருடன் பணிபுரிந்த சில பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகக் கூறி மாணவியின் பெற்றோர் போலீசில் புகாரளித்துள்ளனர். 

மாணவி படுகொலை சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது அங்கு நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று அங்குள்ள பொருட்களை சூறையாடியதுடன், மருத்துவர்களையும், காவல்துறையினரையும் தாக்கியுள்ளது. நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால் காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசி வன்முறை கும்பலைக் கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

மேலும் மாணவி படுகொலை தொடர்பாக  ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 3வது நாளாக விசாரணைக்கு ஆஜரான அவரிடம் மருத்துவ மாணவி மரணம் எப்போது தெரியவந்தது? அதன்பின்பு என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து துருவித் துருவி விசாரணை நடத்தினார்கள். மாணவி படுகொலை செய்யப்படதும் சந்தீப் குமார் கோஷி தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. 

மாணவி படுகொலையில் அடுத்தடுத்து நிலைமை மோசமான நிலையில், மருத்துவ மாணவி கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியும், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.  மருத்துவ மாணவி படுகொலை சம்பவத்தை கண்டித்தும், மத்திய அரசு மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை உள்பட நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சேவை பாதிக்கப்பட்டதால் நோயாளிகள் அவதி அடைந்தனர். மருத்துவ மாணவி படுகொலையை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த போராட்டங்கள் தொடர்பாகவும், மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்தும் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் அறிக்கை வழங்கும்படி அனைத்து மாநில போலீஸ் டிஜிபிகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow