2 இடங்களில் வினாத்தாள் கசிவு.. நீட் மறு தேர்வு கிடையாது.. உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!
Neet Exam Hearing In Supreme Court : ''இரண்டு இடங்களில் வினாத்தாள் கசிந்ததன்மூலம் ஒட்டுமொத்த நீட் தேர்வு முறையும் பாதிக்கப்பட்டுள்ளது அல்லது நீட் தேர்வின் புனிதத்தன்மை கெட்டு விட்டது என்ற முடிவுக்கு வந்து விட முடியாது'' என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Neet Exam Hearing In Supreme Court: இந்தியாவில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' என்னும் நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. மிகவும் கடினமான இந்த தேர்வுக்கு தேர்ச்சி பெற முடியாததால் ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்து வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த மே மாதம் இளநிலை நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் முன்கூட்டியே வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதாவது முன் எப்போதும் இல்லாத வகையில் அதிக அளவிலான மாணவர்கள் 720க்கு 720 என முழுமையான மதிப்பெண்கள் பெற்றதும், ஒரே தேர்வு மையங்களை சேர்ந்த பலர் முதலிடம் பிடித்ததும் சந்தேகத்தை அதிகரித்தது.
இதனால் நீட் தேர்வு எழுதியவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டவர்களுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பிறகு கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மறு தேர்வு நடந்தது. இதன்பிறகு நீட் தேர்வில் முறைகேடு நடந்ததை ஒப்புக்கொண்ட மத்திய அரசு, இது தொடர்பான விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்தது.
இந்த விசாரணையை தீவிரப்படுத்தி வரும் சிபிஐ, நீட் முறைகேடு தொடர்பாக தொடர்ந்து பல்வேறு நபர்களை கைது செய்து வருகிறது. இதற்கிடையே நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 38 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான மனுக்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. மனுதாரர்கள் தரப்பில், ''நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது பல்வேறு இடங்களில் வெட்டவெளிச்சமாகியுள்ளது. ஆகையால் நீட் மறுதேர்வு நடத்த வேண்டும்'' என கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள், ''ஒன்றிரண்டு இடங்களில் நடந்த சம்பவத்தை வைத்து மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது. நாடு முழுவதும் முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரம் இருந்தால்தான் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியும்'' என்று கூறினார்கள்.
மேலும் நீட் தேர்வு முடிவுகளை மாவட்ட வாரியாக, நகரம் வாரியாக வெளியிட வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதை ஏற்று மாவட்ட வாரியாக, நகரம் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்தது.
அப்போது சிபிஐ தரப்பில், ''ஹசாரிபாக் மற்றும் பாட்னா என 2 இடங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கபட்டது. அப்போது வினாத்தாள் கசிந்தது தொடர்பாக ஏதும் சாதனங்களை கைப்பற்றினீர்களா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, ''அவர்கள் அதை அழித்து விட்டனர்'' என்று சிபிஐ கூறியது.
தொடர்ந்து மனுதாரர்கள் தரப்பில் நீட் மறுதேர்வு நடத்த வேண்டும் என வாதிடப்பட்டது. அதற்கு நீதிபதிகள், ''இரண்டு இடங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக 23.33 லட்சம் மாணவர்களை மீண்டும் நீட் தேர்வு எழுத உத்தரவிட்டால், அவர்கள் பல நுறு கிமீ தூரம் வந்து தேர்வு எழுத வேண்டும் என்பது உள்பட பல்வேறு பாதிப்புகளை சந்திக்க வேண்டியது இருக்கும்.
இரண்டு இடங்களில் வினாத்தாள் கசிந்ததன்மூலம் ஒட்டுமொத்த நீட் தேர்வு முறையும் பாதிக்கப்பட்டுள்ளது அல்லது நீட் தேர்வின் புனிதத்தன்மை கெட்டு விட்டது என்ற முடிவுக்கு வந்து விட முடியாது. ஆகவே நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை'' என்று கூறியுள்ளனர்.
What's Your Reaction?






