இபிஎஸ்க்கு பதில் அளித்த முதலமைச்சர்: அதிமுக – திமுக இடையே காரசார விவாதம்

தமிழக சட்டப்பேரவையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்  தொடர்பாக அதிமுக - திமுக இடையே காரசார விவாதம் நடந்தது.

Apr 1, 2025 - 13:13
Apr 1, 2025 - 13:14
 0
இபிஎஸ்க்கு பதில் அளித்த முதலமைச்சர்: அதிமுக – திமுக இடையே காரசார விவாதம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, அதிமுக எம்.எல்.ஏ திண்டுக்கல் சீனிவாசன், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் கட்சி பாகுபடின்றி நடைபெறுகிறது. உறுப்பினர்கள் வழங்கிய பணிகளில் சாத்தியக்கூறு இல்லாத பணிகளுக்கு மாற்றாக வேறு பணிகளை வழங்கினால், அதனை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவித்தார்.

அதிமுக குற்றச்சாட்டு

இது குறித்து பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் சார்ந்த பிரச்னைகளை தான் உறுப்பினர்கள் கோரிக்கையாக வழங்குகிறார்கள். நிதி அதிகமாக இருப்பதாக கூறி நிராகரிக்கப்படுகிறது. என்னுடைய தொகுதியில் 10 திட்டங்களை வழங்கினேன். அவற்றில் இரண்டு தான் நிறைவேற்றப்பட்டுள்ளது என கூறினார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு, சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கம் போல எனது தொகுதியில் கூட அரசு நிகழ்ச்சிகள் நடத்த சமுதாய கூடம் அமைக்க மனு வழங்கினேன். ஆனால் இடமில்லாத காரணத்தினால் மாற்று பணிகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளேன் என பதில் அளித்தார்.  

முதலமைச்சர் பதில்

எ.வ.வேலுவை தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, என்னுடைய தொகுதியில் கூட 440 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் குறித்து கோரிக்கை மனு வழங்கியுள்ளேன். பத்து கோரிக்கைகளில் 2,3,4 கோரிக்கைகள் நிறைவேறுவது நல்ல முன்னேற்றம் தான் என்றார். பின்னர் எழுந்து பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாங்கள் கேட்பது 300, 400 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் அல்ல. பள்ளிக்கூடத்திற்கு கூடுதல் வகுப்பறைகள் தான். இரண்டு கோடி, மூன்று கோடி மதிப்பிலான திட்டங்களை கூட நிராகரித்து விடுகிறார்கள் என குற்றச்சாட்டினார். 

Read more: ’ஸ்பைடர் மேன்’ அடுத்த பாகத்தின் தலைப்பு இதுதான்.. படக்குழு அறிவிப்பு

இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டப்பணிகளை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நானே ஆய்வு செய்கிறேன். அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கர் எந்த கோரிக்கையுமே வழங்காத நிலையில் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி அவரிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

நல்லதே நடக்கும்

இதைத்தொடர்ந்து பேசிய இபிஎஸ், நிதி அதிகம் எனக்கூறி நிராகரிக்கப்படுகிறது. சாத்தியமில்லை எனக்கூறி வேறு ஒரு பணியை பரிந்துரைக்க சொல்கிறீர்கள். வேறு ஒரு பணியை வழங்கினால், அதனையும் நிராகரிக்கிறீர்கள் என காட்டமாக தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய சபாநாயகர் அப்பாவு,   நல்லெண்ண அடிப்படையில் கொண்டு வந்த திட்டம்,  நல்லதே நடக்கும் என தெரிவித்தார். சட்டப்பேரவையில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் மாறி, மாறி கேள்வி எழுப்பியதால் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow