வடசென்னையை ஆட்டிப்படைத்த ரவுடி.. சம்பவம் செந்திலின் பரம எதிரி.. யார் இந்த காக்கா தோப்பு பாலாஜி?

வடசென்னையை ஆட்டிப்படைத்த ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை காவல்துறையினர் என்கவுண்டர் செய்ததில் அவர் உயிரிழந்தார். புறா பந்தயத்தில் தொடங்கி செம்மர கடத்தல் வரை மிரட்டிய ரவுடி காக்கா தோப்பு பாலாஜி ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய சம்பவம் செந்திலின் பரம எதிரியாவார்.

Sep 18, 2024 - 10:18
 0
வடசென்னையை ஆட்டிப்படைத்த ரவுடி.. சம்பவம் செந்திலின் பரம எதிரி.. யார் இந்த காக்கா தோப்பு பாலாஜி?
kakka thoppu balaji encounter

ரவுடிகளுக்கு புரியும் பாஷையில் பேசுவோம் என்று சொன்ன சென்னை காவல்துறை ஆணையர் அருண் தற்போது அடுத்தடுத்து சம்பவங்களை அரங்கேற்றி வருகிறார். காவல்துறையினர் சுட்டுக்கொன்ற காக்கா தோப்பு பாலாஜி யார்? அவரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றது ஏன்?என்று பார்க்கலாம். 

வடசென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி (48) இன்று அதிகாலை வியாசர்பாடி குடியிருப்பு அருகே வைத்து காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். காக்கா தோப்பு பாலாஜி மீது 6  கொலை வழக்கு, 14 கொலை முயற்சி வழக்கு உட்பட 59 வழக்குகள் இருக்கிறது.தொடர்ச்சியாக தலைமறைவாக இருந்து வந்த காக்கா தோப்பு பாலாஜியை இன்று அதிகாலை 4.50 மணியளவில் கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் என்கவுண்டர் செய்தார். 

பள்ளியில் மாணவர்களிடம் நீ வருங்காலத்தில் என்னவாக வர ஆசைப்படுகிறாய் என்று கேட்டால் ஒவ்வொருவருக்கும் ஒரு பதில் இருக்கும். டாக்டர், கலெக்டர், இன்ஜினீயர், ஆசிரியர் என விரும்பும் பதவிகளைச் சொல்வார்கள். ஆனால், பள்ளியில் படிக்கும்போதே டீச்சர் கேட்ட கேள்விக்கு பாலாஜியோ, `டீச்சர் நான் ரவுடியாகுவேன்' என்று கூறி அதிர்ச்சியடையவைத்துள்ளார். அப்படிச் சொன்ன பாலாஜிதான் வடசென்னையை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர்.

கொடுங்கையூர் முல்லை நகர் மேம்பாலம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டு இருந்த நிலையில், கார் ஒன்றை மடக்கி சோதனையிட்டனர். காரின் டிக்கியை சோதனை செய்வதற்காக ஓட்டுனர் அருகே இருந்த நபர் இறங்கி காரின் பின்பகுதியை சோதனையிட்ட போது கார் திடீரென புறப்பட்டு சென்றதாகவும், உடன் இருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்த போது அது பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என தெரியவந்தது. 

அந்த காரை விரட்டி சென்று, சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே உள்ள பிடி குடியிருப்பு பகுதிக்கு சென்ற காக்கா தோப்பு பாலாஜி காரை விட்டுவிட்டு புதரை நோக்கி ஓடியபோது,  போலீஸ் வாகனம் வருவதை கண்டு போலீசாரை நோக்கி தான் வைத்து இருந்த கள்ளத்துப்பாக்கியால் சுட்டதில் போலீஸ் வாகனத்தின் பேனட் மற்றும் கண்ணாடியில் இரண்டு தோட்டாக்கள் பாய்ந்துள்ளது. இதனையடுத்து தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் சரவணன் சுட்டதில் காக்கா தோப்பு பாலாஜியின் மார்பில் குண்டு பாய்ந்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது போகும் வழியிலேயே உயிர் பிரிந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காக்கா தோப்பு பாலாஜியின் உடலானது பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த வியாசர்பாடி குடியிருப்பில் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக மேஜிஸ்திரேட் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு என்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடம் காவல் ஆணையர் சரவணன் பிடியில் இருந்து தப்பியோடியதும், பின்னர் என்கவுண்டர் செய்யப்பட்டதும் குறிப்பிட தக்கது. காவல்துறை ஆணையராக அருண் பதவியேற்ற பிறகு நடைபெறும் இரண்டாவது என்கவுண்டர் இதுவாகும். 

யார் இந்த காக்கா தோப்பு பாலாஜி?

சென்னை பிராட்வே காக்கா தோப்பு பகுதியில் உள்ள பி.ஆர்.என் கார்டன், வள்ளுவர் நகரைச் சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் பாலாஜி (36). 9-ம் வகுப்பு வரை படித்த இவர், ஆரம்ப காலத்தில் அடி, தடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்துக்குச் சென்றார். பாலாஜியின் உறவினரான துரையைப் பார்த்தாலே மற்றவர்களுக்கு ஒரு பயம் இருந்தது. அந்தப் பயம் தன்னைப்பார்த்தாலும் வர வேண்டும் என்று கருதினார் காக்கா தோப்பு பாலாஜி.

புறா பந்தயம் வளர்ப்பில் அதிக ஈடுபாட்டுடன் இருந்த காக்கா தோப்பு பாலாஜிக்கு அடிதடி பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.தன்னைப் பார்த்தாலே பொதுமக்களுக்கு பயம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கில், ரவுடி தாமுவின் அண்ணன் புஷ்பாவை முதல் முறையாக காக்கா தோப்பு பாலாஜி ஸ்கெட்ச் போட்டு கொலை செய்தார். பின்னர் யார் பெரியவன் என்ற நோக்கில் செயல்பட்டு வந்த காக்கா தோப்பு பாலாஜி வடசென்னை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டார். 

சிறையில் காக்கா தோப்பு பாலாஜி இருந்தபோது ரவுடி குற நடராஜனுடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்மூலம் மணல் மேடு சங்கரின் நட்பு கிடைத்தது. டெல்டா மாவட்டங்களில் மணல் மேடு சங்கரின் எதிரிகளான ஆத்தூர் கண்ணையா மற்றும் அவரின் உறவினர் ஆதி ஆகியோர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டனர். கடந்த 2007-ம் ஆண்டு மணல்மேடு சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்டார். இது, அவரின் கூட்டாளிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வட சென்னையை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர காக்கா தோப்பு பாலாஜி திட்டமிட்டார். அதற்குத் தடையாக இருந்தவர்களை அடுத்தடுத்து காக்கா தோப்பு பாலாஜி மற்றும் அவரின் கூட்டாளிகள் கொலை செய்தனர். சதீஷ் என்பவரை 2009 ஆம் ஆண்டும், வீட்டின் மேற்கூறையை உடைத்து உள்ளே இறங்கி பில்லா சுரேஷ் என்பவரை அவரது மனைவி கண் முன்னே வெட்டி படுகொலை செய்தார்.இந்த கொலை சம்பவத்தில் இப்போது வரை காக்கா தோப்பு பாலாஜி பெயர் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், செம்மர கடத்தல் பிசினஸிலும் கால் வைத்தார் காக்கா தோப்பு பாலாஜி.

தற்போது வடசென்னையை ஆட்டிப்படைக்கும் சம்போ செந்திலுக்கும், காக்கா தோப்பு பாலாஜிக்கும் இடையே யார் பெரியவன் என்ற போட்டி சமீப காலமாகவே நடந்து வருகிறது இதற்காக மாறி மாறி தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு தேனாம்பேட்டையில் வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு ரவுடிகளான சிடி மணி மற்றும் காக்கா தோப்பு பாலாஜி ஆகியோர் காரில் சென்ற போது தேனாம்பேட்டை அருகில் வைத்து நாட்டு வெடிகுண்டை காரின் மீது சம்பவம் செந்தில் வீசினார். அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பினர்.

போலீசாரின் கெடுபிடி காரணமாக கடந்த சில வருடங்களாக சம்பவத்திற்குள் நுழையாமல் ஸ்கெட்ச் போட்டு கதையை முடிக்கும் தொழிலையே காக்கா தோப்பு பாலாஜி செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.காக்கா தோப்பு பாலாஜி மீது 6 கொலை வழக்குகள் அடிதடி கட்டப்பஞ்சாயத்து என 59 வழக்குகள் காவல் நிலையங்களில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் 12 முறை குண்டர் சட்டத்தின் கீழ் காக்கா தோப்பு பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .

கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஆர் கே நகர் காவல் நிலையத்தில் ஆயுத தடை சட்டம் வழக்கில் காக்கா தோப்பு பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமினில் வெளியே வந்த காக்கா தோப்பு பாலாஜி அதன் பிறகு தொடர்ச்சியாக தலைமறைவாக இருந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். 

காக்கா தோப்பு பாலாஜியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று வாகன தணிக்கையின் போது போலீசாரை நோக்கி சுட்ட போது எதிர் தாக்குதல் நடத்தி என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக காவல் ஆணையராக பொறுப்பேற்ற அருண் செய்யும் இரண்டாவது என்கவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

குமுதம் செய்திகளுக்காக செய்தியாளர் சுப்பிரமணியன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow