உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே பிரம்மாண்ட மேம்பாலம் திறப்பு.. நிம்மதி பெருமூச்சு விடும் கோவையன்ஸ்

உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளதால் நெரிசலின்றி அனைத்து ரக வாகனங்களும் மேம்பாலத்தை எளிதாக பயன்படுத்த முடியும். கடந்த 6 ஆண்டாக நடந்து வந்த மேம்பால பணி முடிவு பெற்றதால் கோவை பொள்ளாச்சி,பாலக்காடு செல்லும் வாகனங்கள் எந்த நெருக்கடியும் இன்றி விரைவாக சென்று வர முடியும்.

Aug 9, 2024 - 12:05
 0
உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே பிரம்மாண்ட மேம்பாலம் திறப்பு.. நிம்மதி பெருமூச்சு விடும் கோவையன்ஸ்
coimbatore ukkadam bridge

கோவை மாநகரத்தின் பிரம்மாண்டமான மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேம்பாலத்தை திறந்து வைத்துள்ளார். மேம்பாலம் கட்டும் பணி காரணமாக உக்கடம் ஆத்துப்பாலம், கரும்புக்கடை, போத்தனூர் ரோடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. கனரக வாகனங்கள், புட்டு விக்கி ரோடு வழியாக சுமார் 3 கி.மீ தூரம் திருப்பி விடப்பட்டிருந்தது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்ல சுமார் 25 நிமிடங்களாகி வந்தது. மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளதால் 5 நிமிட நேரத்தில் 3.8 கி.மீ தூரத்தில் உள்ள மேம்பாலத்தை எளிதில் கடக்க முடியும். அனைத்து ரக வாகனங்களும் மேம்பாலத்தை எளிதாக பயன்படுத்த முடியும். கடந்த 6 ஆண்டாக நடந்து வந்த மேம்பால பணி முடிவு பெற்றதால் கோவை பொள்ளாச்சி, பாலக்காடு செல்லும் வாகனங்கள் எந்த நெருக்கடியும் இன்றி விரைவாக சென்று வர முடியும்.

கோவை உக்கடம் ஆத்துப்பாலம் இடையே முதல் கட்டமாக 121 கோடி ரூபாய் செலவில் மேம்பாலமும், இரண்டாம் கட்டமாக 195 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மேம்பாலமும் கட்டும் பணி நடந்தது. மொத்தமாக நில எடுப்பு பணிக்கு 152 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. 481.95 கோடி ரூபாய் செலவில் இரு மேம்பால பணிகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்திற்கு 47 மற்றும் 60 டெக்ஸ் லாப் அமைக்கப்பட்டது. ஏறு, இறங்கு தள பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 

உக்கடம் ஏறு தளம் 150 மீட்டர் நீளம், 8.45 மீட்டர் உயரத்திலும், பாலக்காடு ரோடு ஏறு தளம் 162 மீட்டர் நீளம், 8.20 மீட்டர் உயரத்திலும், பாலக்காடு ரோடு இறங்கு தளம் 144 மீட்டர் நீளம், 7.58 மீட்டர் உயரத்திலும் பொள்ளாச்சி ரோடு இறங்கு தளம் 140 மீட்டர் நீளம், 8.40 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்பட்டது. சுங்கம், வாலாங்குளம் ஏறு இறங்கு தளம் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

கோவையில் இருந்து கேரளா செல்லும் மிக முக்கிய சாலையாக உக்கடம் இருப்பதால் , போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக உள்ளது.உக்கடம் முதல் கரும்புக்கடை வரை, முதல் கட்டமாக மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து ஆத்துப் பாலம் முதல் பொள்ளாச்சி, பாலக்காடு சாலைகளில் 2 - வது கட்டமாக மேம்பால பணிகள் நடைபெற்று வந்தது. 2ஆம் கட்ட மேம்பாலம் மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்றது. முதலில் மந்த நிலையில் நடந்த மேம்பால பணிகள் நிறைவடைந்து உள்ளது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வந்துள்ள முதல்வர் மு க ஸ்டாலின் இன்றைய தினம் மேம்பாலத்தை திறந்து வைத்தார்.மேம்பாலம் திறக்கபட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் இன்றி பொள்ளாச்சி, பாலக்காட்டு சாலைக்கு விரைந்து செல்லலாம் என்று வாகன ஓட்டிகளும் அப்பகுதி பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சுயிட்டு மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow