கிருஷ்ண ஜெயந்தி : கோகுலத்தில் கண்ணா கண்ணா... குட்டி கிருஷ்ணரை அழைக்க.. பூஜை செய்ய நல்ல நேரம்

கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 26ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. சின்னக் கண்ணனுக்கு பிடித்தமான பலகாரங்களை படையல் இட்டு வழிபட நல்ல நேரத்தை பார்க்கலாம்.

Aug 21, 2024 - 06:20
 0
கிருஷ்ண ஜெயந்தி : கோகுலத்தில் கண்ணா கண்ணா... குட்டி கிருஷ்ணரை அழைக்க.. பூஜை செய்ய நல்ல நேரம்
Krishna Jayanthi 2024

சென்னை:  ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நல்ல நாளில் அவதரித்தவர் பகவான் கிருஷ்ணர். நள்ளிரவு நேரத்தில் சிறையில் அவதரித்த கண்ணனின் பிறந்தநாளை ஜென்மாஷ்டமியாக நாடு முழுவதும் கொண்டாடுகின்றோம். இந்த ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி திங்கட்கிழமை நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் அற்புதங்களும் லீலைகளும் நிறைந்த அவதாரம் கிருஷ்ணா அவதாரம். கம்சனையும், சிசுபாலனையும், நரகாசூரனையும் வதம் செய்வதற்காக அவதாரம் எடுத்தவர் கண்ணன். சின்னக்கண்ணன் பிறந்த நாளை எப்படி கொண்டாட வேண்டும் என்று பார்க்கலாம். 

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த தினத்தை ஸ்ரீ ஜெயந்தி என்றும், கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 5251வது ஆண்டு பிறந்தநாளை கொண்டாடுகின்றோம். அஷ்டமி திதி ஆகஸ்ட் 26 ஆம் தேதி அதிகாலை 03.39 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 27 அதிகாலை 02.19 மணிக்கு முடிகிறது. ரோகினி நட்சத்திரம் ஆகஸ்ட் 26 பிற்பகல் 03.55 மணிக்கு தொடங்குகிறது ஆகஸ்ட் 27ஆம் தேதி பிற்பகல் 03.38 மணிக்கு முடிகிறது எனவே ஆகஸ்ட் 26ஆம் தேதி நள்ளிரவு உலகம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட நல்ல நேரமாகும். 

பகவான் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. அதனால் தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிகிறோம். வாசலில் தொடங்கி பூஜை அரை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் பதிக்கிறோம். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டுக்குள் தத்தித்தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.

கிருஷ்ணர் தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால்தான் இவரை “கண்ணா'' ''முகுந்தா'' என்று பல பெயர்களில் அழைக்கிறோம். கண்ணைப் போல காப்பவன் என்றும், முகுந்தா என்றால் வாழ்வதற்கு இடம் அளித்து, முக்தி அளிப்பவன் என்றும் நம்புகிறோம். 

கிருஷ்ண ஜெயந்திக்கு முதல்நாளில் வீடுகளை சுத்தம் செய்ய வேண்டும். பூஜை செய்யும் நாளில் வாசலில் இருந்து பூஜை அறை வரைக்கும் அரிசி மாவில் குட்டிக்குட்டி பாதங்கள் வரைந்து கண்ணனை அழைக்க வேண்டும். பூஜை அறையில் கண்ணனுக்கு பிடித்த வெண்ணெய், சர்க்கரை, அவல், முருக்கு, சீடை இனிப்பு சீடை, அதிரசம் தேன்குழல் என பலவகை பலகாரங்களை படையல் இட்டு பூஜை செய்ய வேண்டும். நம் வீட்டில்  உள்ள குழந்தைகளுக்கு கண்ணன் ராதை வேடம் போட வேண்டும். பக்கத்து வீட்டு சிறுவர் சிறுமிகளை பூஜைக்கு அழைத்து அவர்களுக்கு கண்ணனின் லீலைகளை சொல்லும் கதைகளை கூற வேண்டும்.  

கிருஷ்ணரின் மிக தீவிர பக்தர்கள் உணவு, நீர் இல்லா விரதம் மேற்கொள்கின்றனர். கிருஷ்ண ஜெயந்தி அன்று காலை முதல் உணவு, நீர் என எந்த ஒரு வகையான உணவையும் எடுத்து கொள்ளாமல் விரதம் இருப்பது வழக்கம். சரியாக அஷ்டமி திதி நடக்கும் நாளின் இரவு 12 மணிக்கு கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, பிரசாதங்கள் படைத்த பின்னர் தன் விரதத்தை முடிப்பது வழக்கம். 

கிருஷ்ண ஜெயந்தி நாளில் பகவான் கிருஷ்ணரை வேண்டி நடைபெறும் யாக பூஜைகளில் பங்கேற்று கண்ணனை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகிழ்ச்சி தங்கும், அகந்தை அகலும், மூர்க்க குணம் குழந்தைக்கு ஏற்படாது. இளைஞர்களுக்கு அரசியல் ஞானம் உண்டாகும், நிர்வாக திறன் அதிகரிக்கும், மாமனார் வழியில் சொத்துக்கள் கிடைக்கும், திருமணத் தடைகள் அகலும், செல்வம் பெருகும், வயல்களில் விளைச்சல் அதிகரிக்கும், ஆடு, மாடுகள் பல்கி பெருகும், கடன் தீரும், பகைமை ஒழியும், நண்பர்கள் கூட்டு தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள், புகழ் கூடும், அமைதி நிலவும், ஆற்றல் பெருகும், வறுமை இல்லா வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow