டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை... அதிபர் ஜோ பைடன் கண்டனம்!

''அமெரிக்க ஜனநாயகத்தில் அரசியல் வன்முறைகளுக்கு ஒருபோதும் இடமில்லை. இந்த சம்பவத்தில் டிரம்புக்கு பெரிய அளவில் ஆபத்து இல்லை என்பது நிம்மதி அளிக்கிறது''

Jul 14, 2024 - 07:35
 0
டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை... அதிபர் ஜோ பைடன் கண்டனம்!
joe biden

வாஷிங்டன்: அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களமிறங்கியுள்ளார். 

இதற்காக டொனால்ட் டிரம்ப் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், பென்சில்வேனியாவில் டிரம்ப் பரப்புரையில் பங்கேற்றார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென டிரம்ப்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக டிரம்ப்பை சூழ்ந்து அவரை கேடயம்போல் பாதுகாத்தனர். ஆனாலும் டிரம்ப்பின் காதில் துப்பாக்கி குண்டு லேசாக உரசி காயம் அடைந்து ரத்தம் வடிந்தது. பாதுகாப்பு படை அதிகாரிகள் அவரை உடனடியாக அங்கு இருந்து அழைத்து சென்றனர். டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே வேளையில் மர்ம நபர் துப்பாக்கியால் குடியரசு கட்சியின் ஆதரவாளர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்கா புலனாய்வு அமைப்பான FBI விசாரணை நடத்தி வருகிறது.

டிரம்ப் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசிய அவர் ''முன்னாள் அதிபர் டிரம்ப் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து அதிர்ச்சி அடைந்தேன். 

டிரம்ப் இப்போது மருத்துவர்களின் சிகிச்சையில் நலமுடன் உள்ளார். அவரிடம் போனில் பேசி நலம் விசாரிக்க உள்ளேன். அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைக்கு ஒருபோதும் இடமில்லை. இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நாம் இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது. டிரம்பை காப்பாற்றிய பாதுகாப்பு படையினரின் அனைத்து ஏஜென்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இது தொடர்பாக முழு விவரம் தெரியவந்தபிறகு தெரியப்படுத்துகிறேன்'' என்றார். 

அப்போது டிரம்ப்பை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளதா? என்று பைடனிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ''இந்த சம்பவம் குறித்து முழுமையான விவரம் கிடைக்கவில்லை. இதற்கான ஆதாரங்களும் கிடைக்கவில்லை. விசாரணையின் முடிவில்தான் முழுமையான விவரம் தெரியவரும் என்றார்.

இதேபோல் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ''டிரம்ப் மீது  துப்பாக்கிச்சூடு நடதப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். முட்டாள்தனமான இந்த துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த டிரம்பும், மற்றவர்களும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். நமது நாட்டில் வன்முறைக்கு ஒருபோதும் இடமில்லை. சம்பவம் நடந்த இடத்தில் உடனடியாக துரிதமாக செயல்பட்ட அமெரிக்க பாதுகாப்பு படையினருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார். 

மேலும் டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ''அமெரிக்க ஜனநாயகத்தில் அரசியல் வன்முறைகளுக்கு ஒருபோதும் இடமில்லை. இந்த சம்பவத்தில் டிரம்புக்கு பெரிய அளவில் ஆபத்து இல்லை என்பது நிம்மதி அளிக்கிறது. இந்த நேரத்தில் இருந்து அரசியலில் நாகரிகம் மற்றும் மரியாதையை கடைபிடிக்க நாம் அர்ப்பரணித்து கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow