மதுரையில வாக்கிங் போகவே பயமா இருக்கு.. வெளியே போகாதீங்க.. இடைத்தேர்தல் வந்திரும் செல்லூர் ராஜூ கலகல
ADMK Ex Minister Sellur Raju : வாக்கிங் போகாதீங்க.. உங்க உயிருக்கு உத்தரவாதம் இல்லை அப்புறம் இடைத்தேர்தல் வந்து விடும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
ADMK Ex Minister Sellur Raju : திமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டதாக செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார். காலையில் எழுந்து வாக்கிங் போகக்கூட பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார் செல்லூர் ராஜூ.
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மின்கட்டண உயர்வுக்கு காரணம் திமுக அரசுதான் என்று சொன்ன செல்லூர் ராஜூ, எதிர்கட்சியாக இருந்த போது கறுப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்திய ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த உடன் மின்சார கட்டணத்தை உயர்த்துவதாக குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, மதுரையில் எங்கு பார்த்தாலும் வெட்டு குத்து கொலைகள் நடக்கின்றன. காலையில் எழுந்து வாக்கிங் போகவே பயமாக இருக்கிறது. அதிமுக கவுன்சிலர்கள் வாக்கிங் போகாதீர்கள் அப்புறம் இடைத்தேர்தல் வந்து விடும் என்று கூறினார்.
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி நேற்றைய தினம் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டார். அது குடும்பத்தகராறு காரணமாக நடந்த கொலை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். கடந்த 2002 மே 20ம் தேதியன்று மதுரை அண்ணாநகரில் வாக்கிங் போய்விட்டு திரும்பியபோது வீட்டு முன்பு திமுக மாஜி அமைச்சர் தா.கிருஷ்ணன் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தை இன்று நினைவுகூர்த்த செல்லூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணனை வெட்டிக்கொன்றவர்கள் யார் என்றே தெரியாமல் போய் விட்டது என்று சொன்னார்.
இதனையடுத்து அரசியல் பக்கம் பேச்சை திருப்பிய செல்லூர் ராஜூ, எங்கள் பொதுச்செயலாளர் சாணக்கியர் நான்கரை ஆண்டு கால ஆட்சியை பிரதமர் மோடியே பாராட்டினார். எடப்பாடி பழனிச்சாமி ஓட்டுக்கேட்டு வந்த போது அலை அலையாக வந்தனர். உங்களுக்குத்தான் எங்கள் ஓட்டு என்று கூறினார்கள். ஆனால் நடந்தது வேறாக உள்ளது.
யானைக்கும் அடி சறுக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதாவே தோற்றுள்ளனர். அதுபோலத்தான் இப்போது நடந்துள்ளது. 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக நிச்சயம் ஜெயிக்கும். அப்போது எடப்பாடி பழனிச்சாமியின் சாணக்கிய தனத்தை பார்ப்பீர்கள் என்று கூறினார்.
What's Your Reaction?