தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் - யார் இவர்?
சென்னை தலைமையிட ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ் தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தை அடுத்து ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். டேவிட்சன் தேவாசீர்வாதம் யார்? அவர் பின்னணி என்ன என்று பார்க்கலாம்.
டேவிட்சன் தேவாசீர்வாதம் 1995ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக காவல்துறையில் சேர்ந்தார். துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் முதலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். 53 வயது நிறைந்த இவர் ஒரு எம்ஏ பட்டதாரி.
முதல் பணியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஏஎஸ்பி. அதன் பின்னர் கோவை ஏஎஸ்பி. அதனையடுத்து எஸ்பியாக பதவி உயர்வு பெற்று கடலூர், கரூர், காஞ்சிபுரம் மற்றும் கியூ பிரிவு எஸ்.பி., மதுரை போக்குவரத்து துணை ஆணையர், பின்னர் டிஐஜியாக பதவி உயர்ந்து உளவுத்துறை மற்றும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனராக 6 ஆண்டுகள் பணியாற்றினார்.
அதனையடுத்து ஐஜியாக பதவி உயர்ந்து காவல்துறை நலப் பிரிவு, நிர்வாகப்பிரிவு மற்றும் மீண்டும் உளவுத்துறையில் பணியாற்றினார். அதன் பின்னர் ஏடிஜிபியாக பதவி உயர்ந்து காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவில் நியமனம் செய்யப்பட்டார். அதனையடுத்து கோவை காவல் ஆணையராக பணியாற்றியுள்ளார்.
மாநில உளவுத்துறையில் எஸ்பியாகவும், டிஐஜியாகவும், ஐஜியாகவும் நீண்ட காலங்கள் பணிபுரிந்து ஆட்சியாளர்களின் குட்புக்கில் இடம் பிடித்தவர் டேவிட்சன். மதுரை காவல் ஆணையராக பணிபுரிந்த போது டேவிட்சன் அங்கு பல புதிய மாற்றங்களை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
கியூ பிரிவு எஸ்பியாக பணிபுரிந்த போது விடுதலை புலிகள் இயக்கத்தை கண்காணித்தும், மாவோயிஸ்ட் ஊடுருவல் குறித்த பணிகளை சிறப்பாக செய்தமைக்காக பாராட்டுக்கள் பெற்றுள்ளார். அதேபோல் பால்ரஸ் குண்டுவெடிப்பு, தூத்துக்குடி மாவட்ட கன்னிவெடி வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளை சிறப்பாக கையாண்டுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு இவர் தமிழக காவல்துறையின் உளவுத்துறை ஏடிஜிபியாக பணி அமர்த்தப்பட்டார். அதன் பிறகு 2023 ஆம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
What's Your Reaction?