வேங்கைவயல் சம்பவம்: ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்?... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

வேங்கைவயல் சம்பவத்தில் சந்தேகத்துக்குரியவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் குரல் மாதிரி சோதனையும் நடத்தப்பட்டது. ஆனாலும் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர்.

Jul 8, 2024 - 13:41
 0
வேங்கைவயல் சம்பவம்: ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்?... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
வேங்கைவயல் சம்பவம்

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேங்கைவயல், இறையூர், கீழ முத்துக்காடு, காவேரி நகர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இந்த வழக்கில் சந்தேகத்துக்குரியவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் குரல் மாதிரி சோதனையும் நடத்தப்பட்டது. ஆனாலும் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர்.

'இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் சிபிசிஐடி திணறி வருகிறது. ஆகவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வரும் நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், ''கடந்த 2022ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கு தொடர்பாக ஜூலை மாதத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை'' என குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கு பதிலளித்த அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் மற்றும் முனியப்பராஜ் ஆகியோர், ''வேங்கை வயல் சம்பவத்தில் இதுவரை 389 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குரல் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. சந்தேகத்துக்குரிய மூன்று பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தனர். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் காவல் துறையினரால் ஒருவரை கூட கைது செய்ய முடியாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியதுடன், மனிதாபிமானமற்ற முறையில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக அறிக்கைகளை மட்டும் பெற்றுக் கொண்டிருக்க முடியாது எனவும் அதிருப்தி தெரிவித்தனர். 

இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், ''புலன் விசாரணை முன்னேற்ற நிலையில் உள்ளது. ஆதாரங்கள் கிடைத்ததும் உடனடியாக கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும். உயர்நீதிமன்றம் நியமித்த நீதிபதி சத்தியநாராயணன் ஆணையம், இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை. வழக்கு விசாரணை முடியும் நிலையில் உள்ளது'' என விளக்கமளித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், வழக்கு தொடர்பாக தீர்க்கமான முடிவை தமிழ்நாடு அரசு விரைவில் எட்ட வேண்டும் என்று கூறி காவல்துறைக்கு இரு வாரங்கள் அவகாசம் வழங்கி விசாரணையை தள்ளிவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow