ஏலக்காய்.. வாசனைக்கு மட்டுமல்ல.. நரம்பு பிரச்சினையை நீக்கும்..நடுக்கம் போகும்! ஹெல்த் டிப்ஸ்
கல்வி செல்வம் கிடைக்க, மந்த நிலை போக, நரம்பு பிரச்சினை நீங்குவதற்கும் கை நடுக்கம் போகவும் நம் வீட்டிலேயே ஒரு மருந்து உள்ளது. அஞ்சறை பெட்டியில் அம்மா வைத்திருக்கும் வாசனையான அந்த பொருள்தான் ஏலக்காய். பச்சை நிற அந்த சின்ன காய்க்கு உள்ள மருத்துவ குணத்தை பார்க்கலாம்.
சென்னை: நம்முடைய வீட்டில் உள்ள அஞ்சறைப்பெட்டியில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்ற வாசனை பொருட்களுக்கு தனி இடம் உள்ளது. இனிப்பு பலகாரங்கள் செய்ய பயன்படுத்தப்படும் ஏலாக்காய் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது. அறிவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.
என்னென்ன சத்துக்கள்:
ஏலக்காய் விதையில் புரதச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை அடங்கியுள்ளன. ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், பூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. இதில் இருக்கும் வைட்டமின் சி ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படக்கூடியது. இது உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
பக்க விளைவு இல்லை:
நரம்பு நோய்கள் குணமாக எத்தனையோ மருந்துகள் இருந்தாலும் வீட்டு வைத்தியத்தில் ஏலக்காய்க்கு தனி இடம் உண்டு. நமது வீட்டில் இனிப்பு பலகாரங்களுக்கு வாசனை பொருளாக பயன்படுத்தப்படும் ஏலக்காய் மருத்துவ குணம் கொண்டது. ஏராளமான சத்துக்களை கொண்ட ஏலக்காய் பித்த நோய், தலைவலி, சளி காய்ச்சலை கட்டுப்படுத்தும். பக்க விளைவு இல்லாத இயற்கை மருந்து இது.
உணவின் ருசி:
சிறிது ஏலப்பொடியை, வெற்றிலையுடன் மென்று தின்றால், அஜீரணம் அகலும். நன்றாக பசிக்கும் உணவின் ருசி தெரியும். நான்கு மிளகு, சிறிது ஏலக்காய், சுக்கு இவைகளுடன் பால் தெளித்து விழுதாக அரைத்து, நெற்றியில் பற்று போல போட்டு வர தலைவலி சரியாகும். அஜீரணக் கோளாறு, வயிற்றுப் பொருமல் ஆகியவற்றுக்கு இது சிறந்த தீர்வைத் தரும். உணவை எளிதில் செரிக்க உதவும். உடல் பருமன் , உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு, போன்ற பிரச்னைகளுக்கும் ஏலக்காய் அருமருந்தாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி.
மனப்பதட்டம், குமட்டல் போன்றவற்றிற்கும் ஏலக்காயின் வாசனை உதவுகிறது. நோய் எதிர்ப்பு அழற்சி, பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் பண்பு ஏலக்காய்க்கு உள்ளது, நோய் எதிர்ப்பு சக்தி என உடலின் எந்த ஆரோக்கிய பாதிப்புகள் நேர்ந்தாலும் அதை எதிர்த்துப் போராடும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு. ஏலப்பொடியுடன், சிறிது மிளகுப்பொடி சேர்த்து, சிறிதளவு துளசிச் சாறு சேர்த்து சாப்பிட்டால் கடும் கபம் இளகும். ஏலக்காய் விதைகளை வாயில் போட்டு அடக்கிக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கிவர, வாய்நாற்றம் மாறும். வாயில் புண் இருந்தாலும் குணமடையும். அன்னாசிப்பழச்சாறுடன், ஏலக்காய்த்தூள் சேர்த்து குடித்து வந்தால், சிறுநீரகக் கோளாறுகள் குணமாகும். நீர்க்கடுப்பு நீங்கும்.
பற்களின் ஆரோக்கியம்:
வாய் துர்நாற்றம், வாய், பற்களின் ஆரோக்கியத்திற்கும் ஏலக்காய் உதவுகிறது. வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து சொத்தைப்பல் உருவாக்கத்தையும் தடுக்கிறது. எனவே தினசரி ஏதாவதொரு வகையில் அல்லது தினசரி டீயில் கூட ஏலக்காயை தட்டிப்போட்டு குடித்துவரலாம்.
ஏலக்காய் டீ:
ஏலக்காய் டீ சாப்பிடுவது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை அளிக்கும். மன அழுத்தத்துக்கு நல்லது என ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. ஒரு ஏலக்காய் டீ குடித்தால் சளி, காய்ச்சல் குணமடையும். ஏலக்காய்த்தூள், டீ தூள் இரண்டையும் சேர்த்து டீ தயாரித்து அத்துடன் தேன் சேர்த்து, தினம் இருவேளை பருகி வர, நரம்புகள் வலுப்படும். தேனுடன், ஏலக்காய்த்தூள் கலந்து, சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கி, நரம்புகள் நன்கு வலிமை அடையும்.
இளம் தாய்மார்களுக்கு ஏற்ற ஏலக்காய்:
ஏலப்பொடி, சீரகப்பொடி, மல்லிப்பொடி இவைகளுடன், சிறிது கருப்பட்டி கலந்து, ஒரு நெல்லிக்காய் அளவு காலை, மாலை சாப்பிட்டு வர பித்த மயக்கம் சரியாகும். ஏலக்காய், மிளகு, சுக்கு, திப்பிலி, தனியா இந்த ஐந்தையும் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வர வறட்டு இருமல் குணமாகும். இது ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். கல்லீரலில் இருக்கும் தேவையற்ற யூரியா, கால்சியம் மற்றும் இதர நச்சுகளை நீக்கும். குழந்தை பெற்ற பிறகு இளம் தாய்மார்கள் ஏலக்காயை பயன்படுத்தலாம்.
ஏலக்காய் மாலை :
கை நடுக்கத்தைப் போக்கக்கூடியது ஏலக்காய். உடலில் ஏற்படும் தசைப்பிடிப்பு, குடல் மற்றும் வயிற்றுப் பிடிப்புகளிலிருந்து நிவாரணம் பெற்றுத் தரும். விக்கலில் இருந்து நம்மைக் காப்பாற்ற உதவும். படிப்பு மந்தமாக உள்ளவர்கள், உடல் நடுக்க பிரச்சினை உள்ளவர்கள் ஏலக்காய்களை மாலையாக கோர்த்து அதை பெருமாளுக்கு அணிவிப்பார்கள். ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி வணங்கினால் படிக்கும் திறனும் புத்திக்கூர்மையும் அதிகரிக்கும் என்பது கூடுதல் தகவல்.
What's Your Reaction?