பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை.. சென்னை பெரம்பூரில் பதற்றம்
சென்னை: பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியை சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர். தனது வீட்டுக்கு அருகே நின்று பேசிக்கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ஆம்ஸ்ட்ராங்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பிச் சென்றது குறித்து செம்பியம் காவல்நிலைய காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டு காலமாக வழக்கறிஞராகவும் அவர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து 2 நாட்டு வெடிகுண்டுகள், ஒரு கத்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பெரம்பூர் பகுதியில் பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
What's Your Reaction?