ஆஸ்திரியாவில் ஒலித்த வந்தே மாதரம்.. மெய்சிலிர்க்க வைத்த இசைக்கலைஞர்கள்.. மகிழ்ச்சியில் மோடி
வியன்னா: ஆஸ்திரியா நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அங்குள்ள இசைகலைஞர்கள் வந்தே மாதரம் இசைத்து வரவேற்றனர்.இதனை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.
மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடி, ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். முன்னதாக ரஷ்யாவில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவிற்கு சென்றுள்ளார்.
1983ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி ஆஸ்திரியா நாட்டிற்கு சென்ற பிறகு 41 ஆண்டுகள் கழித்து இந்திய பிரதமர் ஒருவர் தற்போது தான் ஆஸ்திரியா நாட்டிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா – ஆஸ்திரியா நாடுகளுக்கு இடையேயான 75 ஆண்டுகால நட்பை போற்றும் வகையில் பிரதமர் மோடியின் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாக ஆஸ்திரியா நாட்டு அரசு கூறியுள்ளது.
நேற்று வியன்னா சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அலெக்சாண்டர் ஷால்லென்பெர்க் வரவேற்றார். அதன் பிறகு ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெஹாம்மர் பிரதமர் மோடிக்கு அதிபர் மாளிகையில் விருந்தளித்தார். அப்போது பிரதமர் மோடியுடன் ஆஸ்திரிய அதிபர் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி, ஆஸ்திரிய இசைக்கலைஞர்கள் நடத்திய இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது இசை கலைஞர்கள் வந்தே மாதரம் பாடலை பிரதமர் மோடி முன்னிலையில் இசைத்து கான்பித்தனர். இதனை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.
ஆஸ்திரியா அதன் துடிப்பான இசை கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது. வந்தே மாதரத்தின் இந்த அற்புதமான இசையமைப்பினால் எனக்கு ஒரு பார்வை கிடைத்தது!என்று பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.
What's Your Reaction?