ஆம்ஸ்ட்ராங் உடலை பார்த்து கலங்கிய திருமாவளவன்.. அரசுக்கு வைத்த கோரிக்கை
உண்மையான குற்றவாளிகள் யாரோ அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் தலித்துக்கள் தலித் இளைஞர்கள் குறிப்பாக தமிழக தென் மாவட்டங்களில் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவது நீடிக்கிறது என்றும் திருமாவளவன் கொதிப்புடன் கூறியுள்ளார்.
பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தபோது, நான்கு பேர் தனியார் உணவு டெலிவரி செய்யும் ஆடையை அணிந்து வந்து ஆம்ஸ்ட்ராங்கிடம் பேச்சு கொடுத்துள்ளனர். அப்போது அங்கு பட்டாக் கத்தியுடன் வந்த இருவரும், ஏற்கனவே இருந்த நான்கு பேரும் சேர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் ஆம்ஸ்ட்ராங். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, பரிசோதனை செய்த மருத்துவர்கள், உயிரிழந்து விட்டதாக கூறினர்.
இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக கொண்டு வந்தனர். இதனையடுத்து உடலை வாங்க மறுத்து ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடற்கூராய்வு முடிந்த பிறகு ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் திருமாவளவன். அவரது உடலை பார்த்து கதறி அழுதார் இயக்குநர் பா.ரஞ்சித்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் தொல் திருமாவளவன்,பகுஜன் சமாஜ் கட்சி அலுவலக வளாகத்திற்குள் ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.இதனை அரசு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கொலையின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை கண்டறிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பொழுது சரணடைந்து இருப்பவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை, அந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் அவர்களை தூண்டி விட்டவர்கள் என அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். சரணடைந்தவர்களை கைது செய்ய கைது செய்து விட்டோம் என்ற அடிப்படையில் புலன் விசாரணை நிறுத்தி விடக்கூடாது.
உண்மையான குற்றவாளிகள் யாரோ அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். பொதுமக்களுக்காக தலையிடுபவர் அதற்காக அவருக்காக ஆங்காங்கே பகை எழுந்து இருக்கிறது. அதற்குரிய பாதுகாப்பை காவல்துறை வழங்கி இருக்க வேண்டும், ஆனால் வழங்கவில்லை அது அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டில் தலித்துக்கள் தலித் இளைஞர்கள் குறிப்பாக தமிழக தென் மாவட்டங்களில் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவது நீடிக்கிறது, இன்று ஒரு அரசியல் தலைவர் அவரது இல்லத்தின் அருகிலேயே கொல்லப்பட்டிருக்கிறார் இது காவல்துறைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் விடுக்கப்பட்டுள்ள சவால்.கூலிப்படைகளை கும்பலை கொலைகார கும்பலை அடையாளம் கண்டு அவர்களை கட்டுப்படுத்த தவறினால் அரசுக்கு மேலும் இதனால் களங்கம் ஏற்படும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?