ஆம்ஸ்ட்ராங்க் கொலை.. அதிர்ச்சியடைந்த மாயவதி.. தமிழ்நாட்டின் வலிமையான தலித் தலைவருக்கே இந்த நிலையா?
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்திற்கு அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங், தமிழகத்தில் தலித் மக்களுக்காக வலுவாக குரல் கொடுத்த தலைவர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த குற்றவாளிகளை தமிழக அரசு தண்டிக்க வேண்டும் என்றும் மாயவதி வலியுறுத்தியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங். 52 வயதான இவர் சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.
அரசியல் கட்சியின் மாநில தலைவர் சென்னையில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என ஒன்று இருக்கிறதா என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சென்னையில் பல இடங்களில் காவல்துறையினரை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் பகுஜன் சமாஜ் கட்சித்தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாயாவதி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் தனது வீட்டின் அருகிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங், தமிழகத்தில் தலித் மக்களுக்காக வலுவாக குரல் கொடுத்த தலைவர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த குற்றவாளிகளை தமிழக அரசு தண்டிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு பின்னர் இன்று தொண்டர்கள் அரசியல் கட்சி தலைவர்களின் அஞ்சலிக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி சென்னைக்கு வந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளதாகவும் அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?