எங்கும் எதிலும் ஆடம்பரம்.. அம்பானி வீட்டு கல்யாணம்..அம்மாடியோவ்.. மொத்த செலவு இத்தனை ஆயிரம் கோடியா?
மும்பை: எங்கும் எதிலும் ஆடம்பரம்.. பிரம்மாண்டமாக உலகமே வியக்கும் வகையில் நடந்து கொண்டிருக்கிறது அம்பானி குடும்ப திருமண நிகழ்வுகள். ஜாம்நகரில் ஆடம்பரமாக மூன்று நாள் நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமண நிகழ்வில் பல சுவாரசிய நிகழ்வுகள் பங்கேற்பாளர்களின் கண்களை கவரும் வண்ணம் இருந்தன. பல ஆயிரம் கோடி ரூபாய்களை வாரி இறைத்து தனது மகனின் திருமணத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் முகேஷ் அம்பானி.
முகேஷ் அம்பானி, ஆசியாவின் பணக்கார தொழிலதிபர்.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத் தலைவர்... இவரின் இளைய வாரிசான ஆனந்த் அம்பானியின் திருமணம்தான் தப்போது ஊடகங்களின் டாக் ஆப் த நியூஸ். முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியும் - என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் சிஇஓ விரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டும் திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.
குஜராத்தின் ஜாம் நகரில் கடந்த மார்ச் மாதம் இவர்களது திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் பிரமாண்டமாக தொடங்கின.விலங்குகள் மீட்பு மையத்திற்காக 3ஆயிரம் ஏக்கரில் செயற்கையாக உருவாக்கப்பட்ட 'வந்தாரா' காட்டில் மூன்று நாட்கள் ஆடம்பரமாக விழா நடைபெற்றது. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், அமெரிக்க பாடகி ரிஹானா மட்டுமன்றி, பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வருகைப் புரிந்தனர். இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் இந்த ப்ரீ - வெட்டிக் கொண்டாட்டங்கள் கவனம் ஈர்த்தது.மூன்று நாள் கொண்டாட்டங்களுக்கு மட்டும் 1,250 கோடி ரூபாய் செலவானதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எங்குமே இது போன்ற ஒரு திருமணம் நடந்தது இல்லை என்று அனைவரும் வியக்கும் வகையில் முகேஷ் அம்பானி அதிக செலவு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை மும்பையில் உள்ள அம்பானியின் இல்லமான ஆன்டிலியாவில் மாமேரு விழாவுடன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமணக் கொண்டாட்டங்கள் துவங்கியது. இதனையடுத்து இந்த ஜோடியின் பிரமாண்ட திருமண விழா நேற்றைய தினம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடந்து வருகிறது.
பிரமிக்க வைக்கும் ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த நகைகளுடன் திருமண கொண்டாட்டங்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் நடந்து வருகிறது.
கோலிவுட், பாலிவுட் பிரபலங்கள்.. அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் இந்த திருமண விழாவில் பங்கேற்ற ஆட்டம் பாட்டம் என அமர்களப்படுத்தியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் அம்பானி வீட்டு திருமண விழாவில் பங்கேற்று நடனமாடியது ஹைலைட். ஆனந்த் அம்பானி அவருடைய கோட்டில் அணிந்திருந்த ப்ரூச் கூட கோடி ரூபாய் மதிப்புடையது.
ப்ரூச் என்பது ஒரு அலங்கார நகை ஆகும். இந்த ப்ரூச்சுக்கு பின்னால் ஒரு பின் இருக்கும். இதை வைத்து பெண்கள் தங்களுடைய ஆடைகளில் இதனை அணிந்து கொள்வார்கள். பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கோட் அல்லது ஜாக்கெட்டை அணிவதற்கு, இதுபோன்ற ப்ரூச்களை பயன்படுத்துவார்கள். புகழ்பெற்ற நகை வடிவமைப்பாளரான லொரெய்ன் ஷ்வார்ட்ஸ் வடிவமைத்த இந்த சிங்க வடிவிலான ப்ரூச், ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களின் போது முதன்முதலில் அனந்த் அம்பானி அணிந்திருந்தார். இந்த ப்ரூச், மஞ்சள் வைரங்களைக் கொண்டு செய்யப்பட்டது, சிங்கத்தின் கண்களுக்கு மரகதங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ப்ரூச்சின் முக்கிய அம்சம் சிங்கத்தின் வாயில் இருந்து தொங்கும் 50 கேரட் வைரம் தான்.
உலக அளவில் கவனம் ஈர்த்து வரும் அம்பானி வீட்டு திருமண விழா கொண்டாட்டம் 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. ஜூலை 12ஆம் தேதி நேற்று திருமணமும், இன்றைய தினம் ஆசீர்வாத நிகழ்வும், நாளைய தினம் ஜூலை 14 அன்று திருமண வரவேற்பு நிகழ்வும் நடைபெற உள்ளது. இதனிடையே அம்பானி வீட்டு திருமண செலவுகள் குறித்து தகவல் ஓன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஃபோர்ப்ஸின் அறிக்கையின்படி, கோலாகலமாக நடந்து வரும் இத்திருமணத்தில் முழு செலவு ரூ. 4,000-5,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திருமணம் செலவு அம்பானி குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பில் 0.5 சதவீதம் என்று கூறப்படுகிறது.
What's Your Reaction?