சினிமாவுக்கு வந்த வரலட்சுமி மம்மி. அடுத்து நிக்கோலய் நடிக்க வருவாரா?
Varalaxmi Sarathkumar : என் உயிர் சினிமாதான், திருமணத்துக்கு பின்னரும் தொடர்ச்சியாக சினிமாவில் நடிப்பேன் என்று நடிகை வரலட்சுமி கூறியுள்ளார். அவர் அம்மா சாயா பாலாவின் வணங்கான் படத்தில் அழுத்தமான கேரக்டரில் நடித்து வருகிறார்.
Varalaxmi Sarathkumar : நடிகை வரலட்சுமி, நிக்கோலய் சச்தேவ் திருமணம் கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி தாய்லாந்தில் நடந்தது. முன்னதாக, ஜூலை 3ம் தேதி சென்னை நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பும், அதற்கு முன்னதாக ஜூலை 1ம் தேதி சங்கீத் நிகழ்ச்சியும் கோலாகலமாக நடந்தது. ரஜினி உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர், அரசியல் கட்சியினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில், சென்னையில் இன்று மீடியாவை சந்தித்தனர் வரலட்சுமி, நிக்கோலய் தம்பதியினர்.
அப்போது ஆங்கிலத்தில் பேசிய நிக்கோலய் ‘‘ இப்ப, தமிழ் கத்துகிட்டு இருக்கிறேன், பொண்டாட்டி, தண்ணி, சாப்பாடு போன்ற வார்த்தை இப்போதைக்கு தமிழில் தெரியும். இனி, மும்பை என் வீடு கிடையாது. சென்னைதான் என் வீடு. என்னை நான் அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன். என் பெயர் நிக்கோலய் சச்தேவ். நான் வரலட்சுமி என்ற அழகான பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறேன். திருமணத்திற்குப் பிறகு வரலட்சுமி அவரது பெயரை வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என நிச்சயம் மாற்ற மாட்டார். அவரது பெயர் வரலட்சுமி சரத்குமார் என்று இருப்பதையே நானும் விரும்புகிறேன். ஆனால், நான் அவரது பெயரை எடுத்துக் கொள்கிறேன். நிக்கோலய் வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என்பதுதான் இனி என் பெயர். சரத்குமார் மற்றும் வரலட்சுமியின் பெருமை இனி எனக்கும் சொந்தம். வரலட்சுமி என்னைத் திருமணம் செய்திருந்தாலும் நான் அவருடைய முதல் காதல் இல்லை. அவருடைய முதல் காதல் எப்போதும் சினிமாவில் நடிப்பதுதான். திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து நடிப்பார். உங்கள் அன்பும், ஆதரவும் நிச்சயம் அவருக்கு வேண்டும்” என்றார்.
அடுத்து பேசிய வரலட்சுமி “ நிக்கோலய் சொன்னதுபோல என்னுடைய காதல் அவர் என்றாலும், என்னுடைய உயிர் சினிமாதான். அதனால், திருமணத்திற்குப் பிறகும் கண்டிப்பாக சினிமாவில் நடிப்பேன். சில படங்களில் நடித்து வருகிறேன். அது தொடரும்’’ என்றார்.
மருமகன் குறித்து பேசிய மாமனார் சரத்குமார். “வரலட்சுமிதான் நிக்கோலயை எங்களுக்கு அறிமுகப்படுத்தினர். நிக்கோலயுடன் எங்கள் குடும்பத்திற்கு கண்டதும் காதல் வந்துவிட்டது. அவர் ரொம்ப எனர்ஜிட்டிக்கான மனிதர் அவர். அவர் கொடுத்திருக்கும் சந்தோஷம் நிச்சயம் வாழ்நாள் முழுவதும் தொடரும். இறைவனால், இவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர். ’’ என்று சென்டிமென்ட்டாக பேசிவிட்டு, இப்போது கேள்விபதில் எதுவும் வேண்டாம். மணமக்களை நீங்கள் வாழ்த்த வேண்டும். இந்த மாத கடைசியில் நான் மீண்டும் மீடியாவை சந்திக்கிறேன். அப்போது நிறைய கேட்கலாம்.நான் பதில் சொல்கிறேன் என்றார்.
2012ம் ஆண்டு போடாபோடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆன வரலட்சுமி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கில் வில்லியாக, குணசித்திர வேடத்தில், ஹீரோயினாக அதிக படங்களில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு ஹிட்டான ஹனுமான் படத்தில் கூட அக்கவாக நடித்த அவர் கேரக்டர் பேசப்பட்டது. கொன்றால் பாவம் படத்தில் வில்லத்தனமான வேடத்தில் சிறப்பாக நடித்து இருந்தார். இந்த மாத கடைசியில் வெளியாக இருக்கும் தனுசின்ராயன் கேரக்டரிலும் முக்கியமான வேடத்தில் வருகிறார். பல வெப்சீரியல்களிலும் நடித்துவருகிறார். அதனால், நடிப்பை நிறுத்தமாட்டேன் என்று தெளிவாக சொல்லிவிட்டார். அதேசமயம், நிக்கோலய்க்கு சினிமா ஆசை இருக்கிறதா? அவர் சினிமாவில் நடிப்பாரா என்பதற்கு விடை இல்லை. வரலட்சுமியின் அம்மாவான சாயா,, பாலா இயக்கத்தில் விரைவில் வர இருக்கும் வணங்கான் படத்தில் ஒரு அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.வரலட்சுமியும் தங்கை பூஜாவும் சினிமாவில் இருக்கிறார். வசந்தபாலான் இயக்கத்தில் வெளியான தலைமை செயலகம் வெப்சீரியலில் அவர் புர க்டஷன் சைடில் பணியாற்றினார்.
**
What's Your Reaction?