சுவரில் ரத்தம்.. பூட்டிய வீட்டில் நெருப்பு... பிணமாக கிடந்த பாட்டி, மகன், பேரன்

Cuddalore Murder Case : கடலூர் மாவட்டத்தில் பூட்டிய வீட்டில் பாட்டி, மகன், பேரன் மூவரும் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Jul 15, 2024 - 16:00
Jul 18, 2024 - 10:49
 0
சுவரில் ரத்தம்.. பூட்டிய வீட்டில் நெருப்பு... பிணமாக கிடந்த பாட்டி, மகன், பேரன்
Cuddalore Murder Case

கடலூர் மாவட்டத்தில் பூட்டிய வீட்டில் பாட்டி, மகன், பேரன் மூவரும் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Cuddalore Murder Case : கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த காராமணிக்குப்பம் ராஜாராம் நகர் சேர்ந்தவர்கள் சுரேஷ்குமார் - கமலேஸ்வரி தம்பதி. சுரேஷ்குமார் மருந்தாளுனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவர்களுக்கு சுதன்குமார் என்ற மகனும், 8 வயதில் நிஷாந்த் என்கிற பேரனும் இருந்து வந்தனர்.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு சுரேஷ்குமார் உடல்நிலை குறைவால் இறந்துவிட்டார். இந்த நிலையில் திங்கட்கிழமை காலை முதியவர் சுரேஷ்குமாரின் வீட்டிலிருந்து கடும் துர்நாற்றத்துடன் புகையும் வெளிவந்துள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கு சென்ற பார்த்தபோது உடல்கள் எரியும் துர்நாற்றம் வீசியதால், அவர்கள் நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெல்லிக்குப்பம் போலீசார், வீட்டின் கதவு வெளியில் பூட்டப்பட்டு இருந்ததை அடுத்து, பூட்டை உடைத்து அதிரடியாக உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கமலேஸ்வரி, சுதன்குமார், நிஷாந்த் ஆகியோர் தனித்தனி அறைகளில் ரத்த வெள்ளத்தில், எரிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளனர். இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வந்து நெருப்பை அணைத்தனர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வீட்டில் ஆய்வு மேற்கொண்டார். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. யாரையும் மோப்பநாய் கவ்விப்பிடிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து, சடலங்களை கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வீட்டின் முன்பு கடந்த 3 நாட்களுக்கான செய்தித் தாள்கள் கிடந்ததால், கொலை நடந்து மூன்று நாட்களாகி விட்டதா? தற்போது வந்து யாரும் எரித்துச் சென்றார்களா? வீட்டுக்குள் சுவரில் ரத்தம் தெரித்துள்ளதால் துரத்தி துரத்தி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்களா என்றும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பூட்டிய வீட்டுக்குள் பாட்டி, மகன், பேரன் என மூன்று பேர் உயிரிழந்து கிடந்த சம்பவம், அந்தப் பகுதியில் பதைபதைப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது, 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow