மத மாற்றம் நடக்கும் கூட்டங்களை உடனே நிறுத்துங்கள்!.. அலகாபாத் ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
பிரயாக்ராஜ் : மதப்பிரசாரம் என்பது அந்த மதத்தை பற்றிய கருத்துகளை பரப்புவது தானே தவிர, ஒருவரை அவரது சொந்த மதத்தில் இருந்து வேறொரு மதத்துக்கு மாற்றுவது அல்ல என அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார். மதமாற்றம் நடக்கும் மதக்கூட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் நாட்டின் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினராக மாறிவிடுவர் எனவும் அலகாபாத் ஹைகோர்ட் நீதிபதி எச்சரித்துள்ளார்.
ஏழைகளையும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களையும் மூளைச்சலவை செய்து அவர்களை மத மாற்றம் செய்வது நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. பணமாகவோ, பொருளாகவோ கொடுத்து மதமாற்றம் செய்பவர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் ஹாமிர்புர் மாவட்டத்தை சேர்ந்த ராம்காளி பிரஜாபதி என்ற பெண்ணின் சகோதரர் ராம்பால். மனநலம் பாதிக்கப்பட்டவர். அவரது மனநோய் தீர மருத்துவம் பார்த்து வந்தனர். எத்தனையோ சிகிச்சை செய்யும் ராம்பால் குணமடையவில்லை. இவர்களின் நிலை அறிந்த அதே ஊரை சேர்ந்த சேர்ந்த கைலாஷ் என்பவர் டெல்லியில் நடக்கும் மதக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றால் பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும் என கிராம மக்களிடம் கூறியுள்ளார்.
ராம்பாலின் மனநல பிரச்னையையும் குணப்படுத்துவதாக ராம்காளியிடமும் கூறினார். இதை நம்பிய கிராம மக்கள் கைலாஷுடன் ராம்பாலை அனுப்பி வைத்துள்ளார். கிராம மக்கள் சிலரும் அந்த கூட்டத்திற்கு சென்றனர். டெல்லியில் நடந்த மதக்கூட்டத்துக்கு சென்ற கிராம மக்கள் அனைவரும் கிறிஸ்துவ மதத்துக்கு மாறி ஊர் திரும்பினர்.
பலரும் ஊருக்கு வந்த நிலையில் ராம்காளியின் சகோதரர் ராம்பால் மட்டும் ஊர் திரும்பவில்லை. இது குறித்து கைலாஷிடம் கேட்ட போது அவர் கூறிய பதில் திருப்திகரமாக இல்லை. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைலாஷை கைது செய்தனர்.
இதனையடுத்து கைலாஷ் ஜாமின் கேட்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று ( ஜூலை 2) விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்தார்.
மதப்பிரசாரம் என்பது அந்த மதத்தை பற்றிய கருத்துகளை பரப்புவது தானே தவிர ஒருவரை அவரது சொந்த மதத்தில் இருந்து வேறொரு மதத்துக்கு மாற்றுவது அல்ல என்று கூறிய நீதிபதி, இது போன்ற பல்வேறு வழக்குகளை இந்த நீதிமன்றம் எதிர்கொண்டு வருகிறது. எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற சமூகத்தினரை சட்டவிரோதமாக கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றுகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் இந்த போக்கை காண முடிகிறது என்றார்.
இது போன்ற மத கூட்டங்கள் நடப்பதை உடனடியாக நிறுத்தாவிட்டால் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் ஒரு நாள் சிறுபான்மையினராக மாறிவிடுவர். டெல்லியில் நடந்த மதக்கூட்டத்துக்கு கிராம மக்களை அழைத்து சென்ற கைலாஷ் அவர்களை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றியுள்ளார் என்பதை விசாரணை அதிகாரி தெளிவாக பதிவு செய்துள்ளார். எனவே குற்றம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பதால் மனுதாரருக்கு ஜாமின் நிராகரிக்கப்படுகிறது என்று கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
What's Your Reaction?