வயநாடு நிலச்சரிவு.. இயற்கைக்கு எதிராக மனிதன் தொடுத்த போரின் பின்விளைவு.. வைரமுத்து எச்சரிக்கை
Vairamuthu X Post on Wayanad Landslide : வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவு பல நூறு உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. ஜலசமாதியா நிலச் சமாதியா என்று சொல்லத் தெரியவில்லை என்று கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
Vairamuthu X Post on Wayanad Landslide : வயநாட்டில் இயற்கை ஆடிய கோரத்தாண்டவத்திற்கு நூறுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மனிதனுக்கு எதிராக இயற்கை போர்தொடுத்தது என்று கூறியுள்ள வைரமுத்து இயற்கைக்கு எதிராக மனிதன் தொடுத்த போரின் பின்விளைவு என்றும் சொல்லலாம் என்றும் பதிவிட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. விடாது கொட்டித்தீர்த்த கனமழையால் வயநாடு மாவட்டத்தின் வைத்திரி தாலுகாவிற்குட்பட்ட மேப்பாடி, முண்டகை மற்றும் சூரல்மலை ஆகிய பகுதிகளில் கடந்த 4 நாட்களில் 70 செமீ வரை மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.ஜூலை 29ஆம் தேதி நள்ளிரவு மற்றும் 30ஆம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் கிராமங்கள், குடியிருப்புகள் இருந்த அடையாளமே தெரியாமல் மண்மூடி போனது.
இந்த நிலச்சரிவு மற்றும் சாலியார் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சூரல்மலையில் உள்ள ஆற்றுப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் முண்டக்கையில் சிக்கியிருக்கும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் கூறப்படுகிறது. மத்திய, மாநில அரசின் பேரிடர் மீட்புப் படைகள், இந்திய ராணுவம் ஆகியோர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து மீட்புப்படையினர் வயநாட்டிற்கு சென்றுள்ளனர்.
இது தொடர்பாக வைரமுத்து தனது பதிவில், பார்க்கப் பார்க்கப் பதற்றம் தருகிறது கேரளத்தின் நிலச்சரிவால் நேர்ந்த நெடுந்துயரம் இருந்த வீடுகளே இடுகாடுகளானதில் இந்திய வரைபடத்திலிருந்தே சில கிராமங்கள் இல்லாமல் போய்விட்டன. அது ஜலசமாதியா நிலச் சமாதியா என்று சொல்லத் தெரியவில்லை பிணமாகிப் போனவர்களின் கடைசிநேரத் துடிப்பு என் உடலில் உணரப்படுகிறது.
மனிதனுக்கு எதிராக இயற்கை போர்தொடுத்தது என்றும் சொல்லலாம்.இயற்கைக்கு எதிராக மனிதன் தொடுத்த போரின் பின்விளைவு என்றும் சொல்லலாம்.மலைகளை மழித்தல் காடுகளை அழித்தல் நதிகளைக் கெடுத்தல் எல்லாம் கூடி மனிதர்களைப் பழிவாங்கியிருக்கின்றன.
புவி வெப்பத்தால் பைத்தியம்பிடித்த வானிலை இன்னும் இதுபோல் செய்யக்கூடும். மனிதர்களும் அரசுகளும் விழிப்போடிருத்தல் வேண்டும் மூச்சுக் குழாயில் மண் விழுந்து போனவர்க்கெல்லாம் என் கண்விழுந்த கண்ணீரில் அஞ்சலி செலுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார் வைரமுத்து.
பார்க்கப் பார்க்கப்
பதற்றம் தருகிறது
கேரளத்தின் நிலச்சரிவால்
நேர்ந்த நெடுந்துயரம்
இருந்த வீடுகளே
இடுகாடுகளானதில்
இந்திய வரைபடத்திலிருந்தே
சில கிராமங்கள்
இல்லாமல் போய்விட்டன
அது ஜலசமாதியா
நிலச் சமாதியா என்று
சொல்லத் தெரியவில்லை
பிணமாகிப் போனவர்களின்
கடைசிநேரத் துடிப்பு
என்… — வைரமுத்து (@Vairamuthu) July 31, 2024
What's Your Reaction?