விக்கிரவாண்டியில் இருந்து வந்த நல்ல செய்தி.. முகத்தில் பூரிப்பு.. லட்டு கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலையில் இருப்பது முதல்வர் ஸ்டாலினை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.இடைத்தேர்தல் வெற்றியை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் லட்டு கொடுத்து வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.

Jul 13, 2024 - 12:49
 0
விக்கிரவாண்டியில் இருந்து வந்த நல்ல செய்தி.. முகத்தில் பூரிப்பு.. லட்டு கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
MK Stalin Vikiravandi result

விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 10ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.திமுக,நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதால் மும்முனைப் போட்டி நிலவியது.  ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் இன்று ( ஜூலை 13) விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகளும், அதன்பிறகு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்பட்டன.

வாக்குகள் எண்ணும் பணியில் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், உட்பட மொத்தம் 150 பேர் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணும் மையத்தைச் சற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.ஆரம்பம் முதலே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னணியில் இருந்தால் 10வது சுற்று முடிவில் 40ஆயிரம் வாக்குகளுக்கு மேல் அதிகம் பெற்றிருந்தார் அன்னியூர் சிவா. கிட்டத்தட்ட திமுகவின் வெற்றி உறுதியாகவே அறிவாலயத்தில் பட்டாசுகள் வெடித்து திமுக தொண்டர்கள் கொண்டாடினர். 

இதனைத் தொடர்ந்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ் பாரதி சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
இந்தியாவில் எந்த கட்சியும் பெறாத வெற்றியை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி பெற்றுள்ளது. கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 என்ற அளவில் முழுமையான வெற்றியை பெற்றோம். 

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு எந்த அரசும் சந்திக்காத சவால்களை திமுக சந்தித்தது.கள்ளக்குறிச்சியில் மிகப்பெரிய சோகம் நிகழ்ந்தது. மத்திய அமைச்சர்கள் உட்பட இந்திய அளவில் இப்பிரச்சினை பூதாகரமாக பேசப்பட்டது. இதனை வைத்து இடைத்தேர்தலின் வெற்றியை முடக்கிவிட வேண்டும் என்று மற்ற கட்சியினர் முயற்சித்தனர்.

சென்னையில் நடைபெற்ற ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு அரசியல் சாயம் பூசப்பட்டது. இதனை அரசியல் பிரச்சினையாக முயற்சித்தனர்.
இந்த இரண்டு மிகப்பெரிய சவால்களுக்கு இடையே இடைத்தேர்தலில் திமுக மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் மூன்று ஆண்டு ஆட்சியை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். 

சவால்களுக்கு மத்தியில் வெற்றிக்காக பாடுபட்ட தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி. திமுகவிற்கு சோதனை வரும் போதெல்லாம் தொண்டர்கள் வெகுண்டெழுவார்கள்.இடைத்தேர்தலில் ஜாதியை மையப்படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டவர்கள் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது. மக்கள் எப்போதும் தெளிவாக வாக்களிப்பார்கள் என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். 

கால் வைத்த இடத்தில் எல்லாம் வெற்றியை தேடித்தந்த இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி. 
கடந்த ஒரு மாத காலமாக அரசியல் கட்சியினர் பத்திரிகைகள் என அனைவரும் திமுகவிற்க்கு நெருக்கடி கொடுத்தனர். இவற்றை அனைத்தையும் தாங்கிக் கொண்டு நாம் தற்பொழுது வெற்றி பெற்றுள்ளோம். விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் வாழ்நாள் முழுவதும்  கடமைபட்டு இருக்கும் என்று ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார்.

இதனையடுத்து அறிவாலயத்திற்கு வந்த திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலினை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். மழை சாரலுக்கு இடையே மணிக்கணக்கில் காத்திருந்த தொண்டர்களுக்கு லட்டு கொடுத்து வெற்றியை கொண்டாடினார் முதல்வர் ஸ்டாலின்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow