மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு 100 ரூபாய் நாணயம்.. கெஜட்டில் அறிவித்த மத்திய அரசு
சென்னை: கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த ரூ.100 சிறப்பு நாணயத்தை மத்திய அரசு வெளியிடுகிறது. இதற்கான அறிவிப்பு மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் மறைந்த திமுகவின் தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி’ என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு விரும்பியது. இதற்காக, ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு சார்பில் கடந்த வருடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நாணயத்தை கடந்த ஜூன் 3ஆம் தேதி கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் இருந்தது. இதன் பின்னணியில் நாணயத்திற்கான நடைமுறைகள் முடிவடையாதது காரணமானது. தற்போது இவை அனைத்தும் முடிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.100 நாணயத்திற்கான அனுமதியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெழுத்து போட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்தியாவில் மத்திய அரசால் நினைவு நாணயங்கள் வெளியிடும் முறை கடந்த 1964ஆம் ஆண்டில் துவங்கியது.இவற்றை மத்திய நிதி அமைச்சகத்தின் உத்தரவின்படி இந்திய ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிடுகிறது. நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின்பெயரில் முதல் நினைவு நாணயம் வெளியானது. இந்தநினைவு நாணயங்கள் முக்கியத்தலைவர்கள் மற்றும் நிகழ்வுகளுக்காக தொடர்ந்து வெளியாகின்றன. நினைவு நாணயத்திற்கான மாதிரி வரைபடம் விண்ணப்பிப்பவர்களிடம் இருந்து பெறப்படுகிறது. இதை வடிவமைக்கும் பணியை மத்திய நிதியமைச்சகம் செய்கிறது. இதனால், கருணாநிதி நாணயத்தின் மாதிரி வரைபடம் தமிழக அரசிடமிருந்து பெறப்பட்டது.இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ‘டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி’ என்றபெயருடன், ‘தமிழ் வெல்லும்’ எனும் வாசகம் அவரது நினைவு நாணயத்தில் இடம்பெற உள்ளது.
இதனிடையே கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்படும் என்று மத்திய அரசின் அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.100 சிறப்பு நாணயத்தில் கலைஞர் உருவப்படத்துக்கு கீழ் அவரது கையொப்பமும் பொறிக்கப்பட்டிருக்கும். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதலமைச்சர் ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர்’ டாக்டர் மு.கருணாநிதி என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட மத்திய அனுமதி வழங்கியது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் அவரின் பெயருடன் ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் இடம்பெற உள்ளது.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவு நாணயத்துடன், மேலும் இரண்டு நாணயத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இதில், உச்ச நீதிமன்றத்தின் 75 ஆவது ஆண்டு - விழா மற்றும் மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் நூற்றாண்டு விழாவிற்கான நினைவு நாணயங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மு.கருணாநிதி உட்பட மூன்று நாணயங்கள் குறித்த உத்தரவை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
What's Your Reaction?