சினிமாவில் என்னை வெச்சு பிழைப்பு நடத்துறாங்க... நாடக காதலுக்கு எதிராக சீறுகிறார் திருமாவளவன்
நாடக காதல் குறித்தும், தமிழ்சினிமாவில் தன்னை தவறாக காண்பிக்கப்படுவது குறித்தும் சினிமா விழாவில் பொங்கியுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன். பிழைத்துவிட்டு போகட்டும் என்றும் கிண்டல் செய்துள்ளார்.
சென்னையில் நடந்த செம்பியன் மாதேவி பட விழாவில் பேசிய, விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காதல் என்பது ஒன்றுதான், நாடக காதல் என்பதே இல்லை. சினிமாவிலும் அரசியல் புகுந்துவிட்டது. நாடக காதல் விஷயத்தில் என்னை வெச்சு சிலர் பிழைப்பு நடத்துறாங்க, பிழைத்துவி்ட்டு போகட்டும் என்று பொங்கியுள்ளார்.
லோக பத்மநாபன் இயக்கி, நடிக்கும் ‘செம்பியன் மாதேவி’ பட பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னையில் நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், அறம் பட இயக்குனர் கோபிநயினார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சினிமா மட்டுமல்ல, நாடக காதல், அரசியல் உட்பட பல விஷயங்களை பேசினார் திருமாவளவன்.
அவர் பேசுகையில் ‘‘ இந்த பட இயக்குனர் லோக பத்மநாபன் 2010ம் ஆண்டு இந்த மேடையில் உதவி இயக்குனராக இருந்தேன். இப்போது இயக்குனராக இருக்கிறேன் என்று தனது பயணத்தை சொன்னார். இந்த இடத்தை வர 12 ஆண்டுகளுக்குமேல் ஆகியிருக்கிறது. இவரே இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார், இயக்கி நடித்துள்ளார். தனது போராட்ட வாழ்வை இந்த மேடையில் பேசினார்.சினிமா அவ்வளவு கஷ்டமானது ’’ என்று இயல்பாக ஆரம்பித்தார்.
பாக ஆரம்பித்தார்.
நாடக காதல் குறித்து திருமாவளவன்:
ஒரு கட்டத்தில் சினிமாவில் இப்போதுபேசப்படும் நாடக காதல் சப்ஜெக்ட்டுக்கு வந்தார். அது குறித்து அவர் பேசுகையில் ‘‘இந்த படத்தை முழுமையாக பார்க்கவில்லை என்றாலும், அதன் கருப்பொருளை உணர்கிறேன். இப்போது தமிழகத்தில் காதலையும் அரசியல் ஆக்குகிறார்கள். சினிமா துறையில் இருக்கும் சிலர் நாடக காதல் என்ற பெயரில் ஒரு விஷயத்தை அரசியல் ஆக்கி, வணிகம் ஆக்கி, ஆதாயம் தேடப்பார்க்கிறார்கள். தமிழகத்தில் காதல் என்பது அரசியலுக்கான பேசு பொருள் ஆகியிருக்கிறது.காதலை பற்றி பேசி ஆதாயம் தேட முடியும், காதலை மூலதனம் ஆக்கலாம் என்பதை தமிழக அரசியலை நாம் முதலில் பார்க்கிறோம். ஒரு படி அரசியல்வாதிகளை தாண்டி, சினிமாதுறையில் உள்ள சிலர் இப்படி செய்கிறார்கள். அவர்கள் அரசியல்வாதிகளை விட கெட்டிகாரர்கள், அவர்களை துாக்கிசாப்பிடுகிறார்கள்.
பாடம் எடுத்த திருமாவளவன்
என் பெயரை சொல்லியும் பிழைக்கிறார்கள், சரி பிழைத்துவிட்டு போகட்டும். அதை நான் கண்டு கொள்வது இல்லை. அவர்கள் சொல்வதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் பெயரை சொல்லி, ஒரு படம் தயாரித்து, அதை வணிகம் செய்ய முடியும் என்றவகையில் நான் மூலதனப்பொருளாக இருக்கிறேன். அதாவது அவர்களுக்கு என்ற நண்பர்களிடம் சொல்கிறேன். காதல் என்பது காலங்காலமாக பேசப்படுகிற உயர்ந்த சொல். சிறந்த சொல். மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து மனித குலத்தை வழி நடத்துகிற வலிமை மிக்கது. யாரும் சொல்லி, துாண்டி காதல் வருவது இல்லை. அது இயல்பான உணர்வு. காதலித்து பார்த்தால்தான் காதலை புரிந்துகொள்ள முடியும். பாடம் எடுத்து புரிய கொள்ள முடியாது.
காதலுக்கு ஆசிரியர்கள் கிடையாது
காதலுக்கு ஆசிரியர்கள் கிடையாது. மனித குலத்தில் மட்டுமல்ல, பல உயிரினங்களுக்குள் காதல் இருக்கிறது. ஒரு ஊரில் 20பேர் இருந்தால், அனைவரும் காதலித்துதான் திருமணம் செய்வது இல்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கிறது. சிலருக்கு உணர்வு இருக்கும். அது கனியாது. காதல் என்பது தனாக வருவது. அதை திட்டமிட்டு , யாரோ சொல்லி வர வழைக்க முடியாது’ என்று சீறினார். சமீபத்தில் ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகக இருந்த கவுண்டம்பாளையம் படத்தை அவர் சாடினார் என்று பார்வையாளர்கள் கிசுகிசுத்தனர்.
பிள்ளைகளை கொச்சைப்படுத்தலாமா?
பின்னர் அவர் பேசுகையில், ‘‘டி சர்ட், ஜீன்ஸ் போட்டு வந்தால், கூலிங்கிளாஸ் போட்டு வந்தால் காதல் வராது. அவர்கள் பின்னால் பெண்கள் போய்விடுவார்கள் என்பதை போன்ற தோற்றத்தை உருவாக்கி, அதை நாடக காதல் என்று சொல்கிறார்கள்.அப்படி இருக்க முடியாது. நாடகம் செய்து யாரையும் ஏமாற்ற முடியாது. காதல் என்பது காதல்தான். நாம் பெற்ற பிள்ளைகளை இப்படி பேசி அவமதிக்க, இழிவு செய்ய கூடாது. யாரையோ பழிக்க, இழிவு செய்ய நாம் பெற்ற பிள்ளைகளை கொச்சை படுத்தக்கூடாது. தனிநபருக்கு எதிராக நாடக காதல் விமர்சனம் தவறாக காண்பித்தாலும், நம் வீட்டு பெண் பிள்ளைகளை கொச்சை படுத்த கூடாது.
காதலுக்கு ஏன் எதிர்ப்பு
திருமாவளவன் பிறப்பதற்கு இந்த மண்ணிில் காதல் இல்லை. நான் வந்தபின்னர்தான் காதல் என்ற சொல் புழக்கத்தில் உள்ளதா? இது இவ்வளவு பெரிய பழி, அபாண்டம், இப்படி பேசுவார்கள், தங்கள் வீட்டு பிள்ளைகளை கருத்தில் கொண்டு பேச வேண்டாமா என்று ஒரு பத்திரிகையாளரிடம் கூட நான் கேட்டேன்.
காதலை ஒருவர் சொல்லி, இன்னொருவர் செய்ய முடியாது. சினிமா, நாவல் போன்ற படைப்புகளில் தவறான தோற்றத்தை உருவாக்க கூடாது என்பது என் வேண்டுகோள். காதலுக்கு ஏன் எதிர்ப்பு வருகிறது தெரியுமா? சாதி கலப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக காதலை மறுக்கிறார்கள். ஒரு சாதிக்குள் திருமணம் நடக்க வேண்டும், கலப்பு வரக்கூடாது என்று நினைக்கிறார்கள். இது அனைத்து சாதிகளுக்கும் பொருந்தும். உரையாடல் நடந்தால்தான் தீர்வு கிடைக்கும். இப்போதைய சமூகத்துக்கு செம்பியன் மாதேவி போன்ற படங்கள் இப்போது தேவைப்படுகின்றன. ’’ என்றார்.
மனுஷி படம் பற்றி புது தகவல்
அதேசமயம், மேடையில் இருந்த இயக்குனர் அறம் கோபிநயினாரை புகழ்ந்து தள்ளினார். ‘அறம் பட இயக்குனர் கோபிநயினார் இயக்கத்தில், இளையராஜா இசையில் விரைவி்ல் வெளி வர இருக்கிற மனுஷி படத்தின் சில காட்சிகளை பார்த்துவிட்டு வந்து இருக்கிறேன். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அறம் படம் இன்னமும் பேசப்படுகிறது. அடுத்து இயக்கியுள்ள மனுஷி படமும்வித்தீியாசமானது. அந்த படத்தில் வழக்கமான சினிமா இல்லை. ஒரு அறைக்குள் சிலர் இரண்டு மணி நேரம் பேசுகிறார்கள். விவாதம் செய்கிறார்கள். கேள்வி கேட்கிறார்கள். அதுதான் கதை. இப்படிப்பட்ட படங்கள் வர வேண்டும்.’’ என்று பல மனுஷி குறித்தும் பல புதுதகவல்களை சொன்னார்.
**
What's Your Reaction?