எஸ்.பி. வருண்குமார் மீது சாதி ரீதியான அவதூறு கருத்து.. சீமானுக்கு 2ஆவது வக்கீல் நோட்டீஸ்

சாதி ரீதியாக அவதூறு பரப்பியதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, திருச்சி எஸ்.பி.அருண்குமார் இரண்டாவது வக்கீல் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Aug 21, 2024 - 07:14
Aug 21, 2024 - 07:33
 0
எஸ்.பி. வருண்குமார் மீது சாதி ரீதியான அவதூறு கருத்து.. சீமானுக்கு 2ஆவது வக்கீல் நோட்டீஸ்
எஸ்.பி. அருண்குமார் மற்றும் சீமான்

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் 'சாட்டை' என்னும் பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தார். அதில் சாட்டை துரைமுருகன் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வெளியிட்டு வந்தார். குறிப்பாக திமுக அரசு மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

மேலும், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலின் போது, தீவிரமாக பிரசாரம் மேற்கொண்ட சாட்டை துரைமுருகன், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தும், தமிழ்நாடு அரசு குறித்தும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி காலை குற்றாலத்தில் தங்கி இருந்த சாட்டை துரைமுருகனை திருச்சி போலீசார் கைது செய்தனர். பின்னர், துரைமுருகன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். 

இதனையடுத்து, சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ''முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி பேசியதாக கூறி சாட்டை திருமுருகனை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். கருணாநிதி பற்றி பேசியதால் கைது என்றால் காவல்துறையினர் முடிந்தால் என்னை கைது செய்யட்டும். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களையும், கொலை செய்பவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்காத காவல்துறை, கருணாநிதி பற்றி பேசியதற்காக கைது நடவடிக்கை எடுப்பது வெட்கக்கேடானது” என்று தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, சீமான் அவதூறாக பேசியதாக கூறி பல வீடியோக்கள் இணையத்தில் வெளியான நிலையில், இந்த வீடியோக்களை திருச்சி எஸ்.பி வருண்குமார் திட்டமிட்டு வெளியிட்டு வருவதாக துரைமுருகன் குற்றம்சாட்டினார். அதேபோல் எஸ்.பி வருண்குமார் சாதிய நோக்கத்துடன் செயல்படுவதாக அவரது பெயரை குறிப்பிடாமல் பொதுவெளியில் சீமான் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அதன்பிறகு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலரும் எஸ்.பி. வருண்குமார் குறித்து வலைதளங்களில் கடுமையாக விமாசனங்களை முன் வைத்து வருகின்றனர். இதன் காரணமாக வருண்குமார் குறித்தும் அவரது குடும்பத்தினர் பற்றியும், நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறத்து சீமானுக்கு தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் விட்ட எஸ்.பி.வருண்குமார், தனக்கு எதிராக அவதூறு பரப்பியதற்காக 7 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ரூ.2 கோடி நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வழக்கறிஞர் மூலம் 16 பக்கத்திற்கு விளக்கம் அளித்து ஒரு அறிக்கை ஒன்றறை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் இதற்கு 16 பக்கங்கள் கொண்ட பதில் கடிதத்தை சீமான் தனது வழக்கறிஞர் மூலமாக சமர்ப்பித்துள்ளார்.

அதில், திருச்சி எஸ்.பி. வருண்குமாரின் சாதி என்னவென்றே சீமானுக்கு தெரியாது. சாட்டை துரைமுருகனிடம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதையே சீமான் பேசினார். சாட்டை துரைமுருகன் கூறியதை உண்மை என நம்பி சீமான் பேசினார். திருச்சி எஸ்.பி.யை சாதிய ரீதியாக இழிவுப்படுத்தும் எண்ணம் சீமானுக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீமானுக்கு இரண்டாம் வக்கீல் நோட்டீஸ் அனுப்ப திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சாட்டை துரைமுருகனுக்கு தவறான தகவல் கொடுத்ததாக கூறப்படும் ஐ.பி.எஸ் அதிகாரிக்கும், சாட்டை துரைமுருகனுக்கும் எஸ்.பி. வருண்குமார் முதல் நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow