மதுவை அரசே விற்பது தேச விரோதம்.. விசிக மது ஒழிப்பு மாநாடு.. அதிமுகவிற்கு திருமாவளவன் அழைப்பு
விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்கலாம் , சாதிய,மதவாத கட்சிகளை தவிர்த்து எல்லா கட்சிகளும் பங்கேற்கலாம் என திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், வரும் அக்டோபர் 2 ஆம் தேதி விசிகவின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 69 பேர் பலியானார்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த போது மதுபான கடைகளை அரசு மூட வேண்டும், சாராய கடைகளை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று அங்குள்ள கோரிக்கை வைத்தனர்.ஆகவே தான் மதுவிலக்கு கோரி மாநாட்டை விசிக நடத்துகிறது.
மேலும் திமுகவிற்கும் , அதிமுகவிற்கு இடசாரி கட்சிக்கும், விசிகவிற்கும் மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடு உண்டு என்றாலும் ஆட்சியில் உள்ள அரசுக்கு மதுவிலக்கை அமல்படுத்துவதில் என்ன தயக்கம் என்று தெரியவில்லை.
ராணுவத்தில் இருந்தால் மது அருந்தலாம், கேண்டீனில் மது வாங்கலாம் என்று இருக்கும் நிலை மாற வேண்டும். மதுவிலக்கை தேசிய கொள்கையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.மதுவிலக்கை அமல்படுத்த முன் வரும் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பை ஈடு செய்ய சிறப்பு நிதி வழங்க வேண்டும்.
மனித வளத்தை பாதிக்க கூடிய மது விற்பனையை அரசே செய்வது தேசத்திற்கு விரோதமான செயல். தேர்தல் அறிக்கையில் கூறிய மதுவிலக்கு கொள்கை திட்டத்தை திமுக அரசு உயிர்பிக்க வேண்டும்.மதுவை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மதுவுக்கு மாற்றாக கள்ளுக் கடைகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வலுக்கிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த திருமாவளவன், கள்ளு கடை உள்ளிட்ட எந்த போதை பொருளும் கூடாது என்பது தான் விசிகவின் நிலைப்பாடு
விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவும் வரலாம் எல்லாம் கட்சிகளும் வரலாம் இந்த நிலைப்பாடை தேர்தல் அரசியலோடு ஒப்பிட்டு பார்க்க கூடாது என்று கூறிய திருமாவளவன், மாநாடு நடத்தும் விஜய்க்கு வாழ்த்துகள் என்றும் கூறினார்.
திருமாவளவன் தற்போது திமுக கூட்டணியில் இருக்கிறார். கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்த விசிக, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல், 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போதும் திமுக கூட்டணியில் நீடித்தது.தற்போது கூட்டணி அரசுக்கு எதிராக விசிக நடத்தப்போகும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு திருமாவளவன் அதிமுகவிற்கு அழைப்பு விடுத்துள்ளது தமிழக அரசியல் வானில் ஏதேனும் மாற்றம் நிகழ்கிறதா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?