Sathuragiri Shiva Temple : சனிப்பிரதோஷம்.. ஆவணி அமாவாசை.. சதுரகிரிக்கு செல்ல முடியுமா? வனத்துறை அப்டேட்
Sathuragiri Shiva Temple : ஆவணி மாத தேய்பிறை சனிக்கிழமை பிரதோஷம், ஆவணி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
Sathuragiri Shiva Temple : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். சிவன், அம்மையப்பர் உரு எடுத்தது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் தலத்தில்தான். அன்னை பார்வதி தேவி சந்தனக் குழம்பில் லிங்கத்தை உருவாக்கி அதன் முன் அமர்ந்து தவம் செய்து, சிவனுடன் இடப்புறம் அமர்ந்த தலமிது. சதுராசலம், சித்தர்கள் தேசம், சிவன்மலை, மூலிகைவனம் என்று பெரியோர்களால் போற்றப்படும் சதுரகிரி மலையில் கோயில் கொண்டுள்ளார், சுந்தர மகாலிங்கப் பெருமானார். மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடியருகே மேற்பகுதி தட்டையான, சதுர வடிவிலான நான்கு மலைகள் உண்டு.
நான்கு வேதங்களே சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தர்கிரி என்ற பெயர்களில் மலைகளாகி நிற்க, அவற்றின் நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கிறது, சஞ்சீவிகிரி. இம்மலையே சதுரகிரி என்றனர் முன்னோர்கள். மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார். சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், இந்த மகாலிங்க மலையை சித்தர்கள் வாழும் பூமி என்கின்றனர்.
வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்திற்கு மாதம் 8 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இன்றும் இத்தளத்தில் சித்தர்கள் வாழ்ந்து வருவதால் இது சித்தர்களின் சொர்க்க பூமி எனவும் நினைத்த காரியங்கள் நடைபெறும் எனவும் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமியை தரிசனம் செய்கின்றனர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல மாதந்தோறும், பிரதோஷம், அம்மாவாசை பௌர்ணமி ஆகிய 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையை சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி என்பது வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆவணி மாத சனிப்பிரதோஷம், அமாவாசை தினங்களை முன்னிட்டு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 31.8.24 ஆம் தேதி முதல் 3.9.24 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 12:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர், இந்நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேற அனுமதி கிடையாது என்றும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?