ரூ.100 கோடி நில மோசடி.. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் எம் ஆர் விஜயபாஸ்கர் மனு.. ஜாமின் கிடைக்குமா?
போலி சான்றிதழ் வழங்கி பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் எம்.ஆர்.சேகர் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார்
கரூரில், போலி சான்றிதழ் வழங்கி பத்திரப்பதிவு செய்ததாக கரூர் நகர காவல் நிலையத்தில் மேலக்கரூர் பொறுப்பு சார்பதிவாளர்
அளித்த புகாரில் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த ஜூன் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என்பதால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி மனு தாக்கல் செய்தார். அந்த முன் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையில் கடந்த மாதம் 14ம் தேதி இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதே நாளில் வாங்கலை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவர் சகோதரர் சேகர், மற்றும் பிரவீண் உள்ளிட்ட 13 பேர் தன்னை மிரட்டி 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் சொத்துக்களை அபகரித்து விட்டதாக புகார் தெரிவித்திருந்தார்.
இப்புகார் வாங்கல் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு கடந்த மாதம் 22ம் தேதி 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் சிகிச்சையின்போது உடனிருக்கவேண்டும் எனக்கூறி கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் முன் ஜாமீன் மற்றும் இடைக்கால முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவரது சகோதரர் எம்.ஆர்.சேகர் இருவரும், இந்த வழக்கிற்கும் தங்களுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. அரசியல் முன்விரோதம் மற்றும் காழ்ப்புணர்வு காரணமாக இந்த வழக்கில் தங்கள் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது. வயதான காலத்தில் அறுவை சிகிச்சையும் செய்ய இயலாத சூழலில் மருத்துவமனையில் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் தங்களது தந்தையுடன் உடனிருக்க வேண்டிய அவசியம் இருப்பதால், தங்களுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதனிடையே இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அவர்து சகோதரர் சேகரும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல் துறையினர் ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில், தங்களிடம் விசாரணை நடத்த எந்த அவசியமும் இல்லை என்பதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். இந்த மனுக்கள், நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
What's Your Reaction?