மக்களவையில் அனலை கிளப்பிய ராகுல்காந்தி.. கையில் சிவன் படம்.. அபயமுத்திரை.. பாஜகவினர் கொந்தளிப்பு
இந்து மதம் என்பது பயம், வெறுப்பு மற்றும் பொய்களைப் பரப்புவது அல்ல என்று லோக்சபா எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார் சிவபெருமானின் படத்தைப் பார்த்தால், இந்துக்களால் ஒருபோதும் பயம், வெறுப்பு ஆகியவற்றைப் பரப்ப முடியாது என்பது தெரியும், ஆனால் பாஜக பயம், வெறுப்பு ஆகியவற்றை 24 மணிநேரமும் பரப்புகிறது என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று பேசியது அனலை கிளப்பியது. வாழ்க அரசியல் சாசனம் என்று கூறி தனது உரையைத் தொடங்கினார். ராகுல் காந்தி பேசும்போது பாஜக எம்.பி.க்கள் பாரத் மாதா கீ ஜே என முழக்கமிட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பின் மீதான தாக்குதலை எதிர்க்கும் மக்கள் மீது திட்டமிட்ட மற்றும் முழு அளவிலான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எங்களில் பலர் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டுள்ளனர். சில தலைவர்கள் இன்னும் சிறையில் உள்ளனர். ஏழைகள், தலித்துகள், சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நானும் 55 மணி நேரத்துக்கு மேல் விசாரிக்கப்பட்டேன்.பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் நான் தாக்கப்பட்டேன் பல வழக்குகள் இருந்தன.
ராகுல்காந்தி பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென காந்தி, சிவபெருமானின் படத்தைக் காட்டினார், அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா,சபையில் பிளக்ஸ் கார்டுகளைக் காட்டக்கூடாது என்று நினைவூட்டினார். தொடர்ந்து பேசிய சிவன் கையில் இருக்கும் திரிசூலம் வன்முறைக்கானது இல்லை. வன்முறையை குறிக்கவில்லை. அகிம்சைக்கானது.காங்கிரஸ் கட்சியினர் அவையில் சிவன் படத்தை காட்டியதால் சிலருக்கு கோபம் வந்திருக்கலாம் என்றார்.
காங்கிரஸ் கட்சியின் சின்னம் சிவனின் கையில் உள்ள அபய முத்திரை போல இருக்கும்.இஸ்லாம் மற்றும் சீக்கியம் உட்பட அனைத்து மதங்களும் தைரியத்தையும் அச்சமின்றி இருப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றன என்று காந்தி மீண்டும் வலியுறுத்தினார்.
நான் இயல்பாக பிறந்தவர் இல்லை. கடவுளால் அவதரிக்கப்பட்டவன் என்று மோடி கூறியுள்ளார். நாங்கள் இதை கூறவில்லை. பிரதமர் தான் கூறி இருக்கிறார். அப்படி என்றால் இவர் கடவுளிடம் பேசிய பின்னர்தான் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டாரா? மத்திய அரசின் கொள்கையால் மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் ஏற்பட்டுள்ளது. வன்முறை ஏற்பட்ட மணிப்பூருக்கு பிரதமரும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் செல்லாதது ஏன்?'' என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
What's Your Reaction?