ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல் கடிதம்.. பள்ளி தாளாளருக்கு தொடர்பு?...

ஓட்டுநரை பழி வாங்குவதற்காக கடிதம் அனுப்பியதும், கோவளம் கடலோர காவல்நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்ததை அடுத்து, தலைமறைவான தனியார் பள்ளி தாளாளரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Aug 7, 2024 - 17:42
 0
ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல் கடிதம்.. பள்ளி தாளாளருக்கு தொடர்பு?...
ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த பள்ளி தாளாளர்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 21 பேரை செம்பியம் போலீசார் கைது செய்தனர். அதில் 5 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல் கடிதம் கடந்த வாரம் வந்தது. இது குறித்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த மிரட்டல் கடிதத்தில் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் படூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்று எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து சதீஷை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் மிரட்டல் கடிதம் அனுப்பவில்லை என்பது தெரிந்தது. மேலும் சதீஷை சிக்க வைக்க இது போன்ற கடிதம் அனுப்பபப்பட்டுள்ளதும், மேலும் தனது பெயரில் ஏற்கனவே காவல்நிலையம் ஒன்றிக்கு இதே போல மிரட்டல் கடிதம் அனுப்பட்டடுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் பிறகு சதீஷை விடுவித்த போலீசார், கேளம்பாக்கம் போலீசாரிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டு விசாரணைக்கு உதவும்படி செம்பியம் போலீசார் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. கேளம்பாக்கம் போலீசார் சதீஷ் பின்னணி குறித்து விசாரித்தபோது, தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர் என்பது தெரிந்தது. அந்த பள்ளி தாளாளர் அருண் ராஜ் என்பவர் ஏற்கனவே மிரட்டல் வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்கு சென்று வந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ரோஸ் நிர்மலா என்பவர் பணியாற்றி உள்ளார். கடலூரை சேர்ந்த, தனியார் நர்சரி பள்ளியின் தாளாளரான அருண்ராஜ் பள்ளி அங்கீகாரம் தொடர்பாக ரோஸ் நிர்மலாவை அணுகிய போது நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

ஆத்திரத்தில் பழிவாங்குவதற்காக அருண்ராஜ், செங்கல்பட்டில் உள்ள ரோஸ் நிர்மலா வீட்டின் முன்பு ஆபாச போஸ்டர்கள் மூலம் கொலை மிரட்டல் விடுத்தாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் கேளம்பாக்கம் போலீசார் பிப்ரவரி மாதம் அருண்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறகு ஜாமினில் வெளியே வந்து விட்டார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் சாட்சியாக ஓட்டுனர் சதீஷ் என்பதால் அவரை பழிவாங்குவதற்காக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவரை சிக்க வைக்க கொலை மிரட்டல் கடிதம் அனுப்பது தெரிய வந்துள்ளது. அவரே கோவளம் கடலோர காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியதும் தெரியவந்துள்ளது.

நிர்மலா வீட்டின் முன் ஒட்டிய ஆபாச போஸ்டர், காவல்நிலையத்திற்கு அனுப்பப்பட்ட கடிதம், ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு மிரட்டல் விடுத்த கடிதம் ஆகிய மூன்றும் ஒரே எழுத்து வடிவம் (Font) உடையது என்பதால் அருண் மிரட்டல் விடுத்து இருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

மேலும் சதீஷிடம் புகாரை பெற்று கேளம்பாக்கம் போலீசார் மற்றும் செம்பியம் போலீசார்  அருண்ராஜை தேடி கடலூர் மாவட்டத்திற்கு சென்றபோது அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள பொன்னை பாலு உள்பட 5 பேரிடம் தனிப்படை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow