நெப்போலியன் மகன் திருமணம்.. அமெரிக்கா டூ ஜப்பான்.. ஓலைசுவடி ஸ்டைலில் திருமண பத்திரிக்கை
Actor Nepoleon Son Wdding in Japan : திருச்சிக்காரரான நெப்போலியன், திருநெல்வேலியில் மகனுக்கு நிச்சயதார்த்தம் செய்த நிலையில் ஜப்பானில் திருமணம் நடத்த உள்ளார். அந்த திருமணப்பத்திரிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Actor Nepoleon Son Wdding in Japan : நெப்போலியன் மகனின் திருமணம்தான் இப்போது லேட்டஸ்ட் டாபிக். வீடியோ கால் மூலம் அமெரிக்காவில் இருந்து திருநெல்வேலிக்கு வந்து நிச்சயதார்த்தம் செய்த நெப்போலியன் தற்போது தனது மகனின் திருமணத்தை ஜப்பானில் நடத்த உள்ளார். அதற்காக அவர் அச்சடித்துள்ள திருமண பத்திரிக்கை தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
திருச்சியில் பிறந்து வளர்ந்த நெப்போலியன் கே.என் நேரு மூலம் அரசியலுக்கு வந்து பின்னர் இயக்குநர் பாரதிராஜா மூலம் புது நெல்லு, புது நாத்து படத்தில் நடிகரானார். சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா, கிழக்கு சீமையிலே உட்பட பல படங்களில் நடித்த அவர், வில்லன், கதாநாயகன் மட்டுமல்லாது குணசித்திர வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.
சினிமாவில் பிஸியாக இருந்த போதே அரசியல் நுழைந்தவர் திமுக சார்பில் வில்லிவாக்கம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். பெரம்பலுார் மக்களவை தொகுதி எம்பியாகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தார். பின்னர் பாஜவில் இணைந்தார். இப்போது அரசியலில் அதிக ஆர்வமின்றி இருக்கிறார்.
நெப்போலியன் ஜெயசுதா தம்பதியினருக்கு தனுஷ், குணால் என 2 மகன்கள். இதில் மூத்த மகன் தனுஷ், அரியவகை தசை சிதைவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு நெல்லை உட்பட பல இடங்களில் சிகிச்சை அளித்தார். பின்னர், மகன் வசதி, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் டென்னசி மாகாணத்தில் செட்டில் ஆனவர், அங்கே ஜீவன் என்ற நிறுவனம் தொடங்கி பல தொழில்களை நடத்திவருகிறார். இயற்கை விவசாயமும் செய்து வருகிறார் நெப்போலியன்.
இளையமகன் லாஸ்வேகாசில் படித்து வருகிறார். அமெரிக்காவில் செட்டில் ஆனாலும் அவ்வப்போது தமிழகம் வந்து பல படங்களில் நடித்து வருகிறார் நெப்போலியன். இந்நிலையில், நெப்போலியன் மூத்த மகன் தனுஷ், திருநெல்வேலியை சேர்ந்த மூலக்கரைப்பட்டி அக்ஷயா திருமண நிச்சயதார்த்தம், ஜூலை 7ம் தேதி நெல்லையில் நடந்தது. அதில் நெப்போலியன் குடும்பத்தினர் கலந்து கொண்டனர், பயண பிரச்னை காரணமாக மணமகன் அமெரிக்காவில் இருந்தபடியே வீடியோ கால் மூலமாக நிச்சயதார்த்தில் பங்கேற்றார்.
தனுஷ், அக்ஷயா திருமணம் ஜப்பான் நாட்டில், டோக்கியாவில் நவம்பர் 7ம் தேதி நடக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டோக்கியோ திருமணம் குறித்து பேசிய நெப்போலியன் தரப்பினர், தசைபாதிப்பால் பாதிக்கப்பட்ட மகனின் எதிர்காலம், வசதிக்காகவே அவர் அமெரிக்கா சென்றார். அந்தவகை பாதிப்புள்ளவர்களுக்கு அந்த நாட்டில் பல வசதிகள் இருக்கின்றன. இந்தியாவி்ல் அது மிகக்குறைவு. இ்ப்போது நெப்போலியன் ஜீவன் குரூப் நிறுவனங்களை தனுஷ் கவனித்து வருகிறார்.
அவரின் திருமண நிச்சயதார்த்தம் நெல்லையில் நடந்துள்ளது. திருமணத்தை இந்தியாவில் நடத்த ஆசை இருந்தாலும், விமானத்தில் அமெரிக்காவில் இருந்து வர ஒரு நாள் வரை ஆகும். அந்த பயணம் தனுசுக்கு செட்டாகாது. கப்பலில் வந்தால் பல வாரங்கள் ஆகும். எனவே, குறைவான விமான பயணத்தில் செல்லும் படியான நாட்டில் திருமணம் நடந்த முடிவானது. அந்தவகையில் கடைசியில் ஜப்பான் தலைநகர் டோக்கியா என்று முடிவானது.
நெப்போலியன் வசிக்கும் இடத்தில் இருந்து டோக்கியோவுக்கு 10 மணி நேரத்தில் சென்றுவிடலாம். அது, தனுசுக்கு வசதியானது. எனவே, ஜப்பானில் திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. மணமகள், மணமகன் வீட்டார், நெப்போலியன் நண்பர்கள் திருமணத்துக்காக டோக்கியோ செல்ல தயாராகி வருகிறார்கள்.
திருமண பத்திரிக்கையும் அழகான பழங்கால ஓலைச்சுவடி வடிவில் நேர்த்தியாக அச்சடிக்கபட்டுள்ளது. தனுஷ்-அக்ஷயா திருமணம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் நவம்பர் மாதம் 7ம் தேதி புதன் கிழமை நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருமண நிச்சயதார்த்தம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது போல திருமண பத்திரிகையும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ஜப்பானில் திருமணம் நடக்க உள்ளதால் சமீபத்தில் சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டின் இந்திய துாதர் தி டக்காஹசி மியூன்னோவை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கியிருக்கிறார். பிசினஸ் தொடர்பான மியான்மர் உட்பட பல நாட்டு துாதர்களும் திருமண அழைப்பிதழ் வழங்கி வருகிறார்.
திருச்சிக்காரரான நெப்போலியன், திருநெல்வேலியில் மகனுக்கு நிச்சயதார்த்தம் செய்த நிலையில் ஜப்பானில் திருமணம் நடத்த உள்ளது. அரசியல், சினிமா வட்டாரத்திலும் வியப்பாக பேசப்படுகிறது. தமிழ்சினிமாவில் இதுவரை ஜப்பானில் யாரும் திருமண நிகழ்ச்சியை நடத்தியது இல்லை. மகனின் மகிழ்ச்சி, வசதிக்காகவே அவர் அமெரிக்கா சென்றார். இப்போதும் மகனுக்காகவே ஜப்பானில் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்துகிறார் நெப்போலியன்.
What's Your Reaction?