தமிழ்நாட்டிற்கு பொங்கி வரும் காவிரி.. விநாடிக்கு 8000 கனஅடி தண்ணீர் திறக்கிறது கர்நாடகா
தமிழ்நாட்டுக்கு காவிரியில் தினமும் 8,000 கனஅடி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தினமும் 8,000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகா முடிவு செய்துள்ளதாக கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அங்குள்ள அணைகள் நிரம்பத்தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியவில்லை. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு தண்ணீரை காவிரி ஆற்றில் திறந்து விட கர்நாடகா மறுக்கிறது. அதற்குக் காரணம் அங்குள்ள அணைகளில் தண்ணீர் இல்லை என்று கைவிரித்து விட்டது கர்நாடகா. இதனால் மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது. இந்த நிலையில்
காவிரியில் தமிழ்நாட்டுக்கு 12ஆம் தேது முதல் 31ஆம் தேதி வரை 20 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. இதற்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால், இந்த மாத இறுதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று அறிவித்தது. என்றாலும், தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருப்பது குறித்து ஆலோசிப்பதற்காக பெங்களூருவில் நேற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், காவிரிக்கு நீர் தரும் 4 அணைகளின் நிலவரங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கினர். இந்த நிலையில், தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு 11, 500 கனஅடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட முடியாது என்றும், 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுமென்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?