புதிய சட்டங்கள் மூலம் அப்பட்டமான இந்தி திணிப்பு... பாஜகவை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

''அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு. இது பல மொழிகள் - பல கலாச்சாரங்கள் சங்கமித்திற்கும் நமது தேசத்தின் அடிப்படை நீதிக்கும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் எதிரானது''

Jul 2, 2024 - 07:49
Jul 2, 2024 - 11:30
 0
புதிய சட்டங்கள் மூலம் அப்பட்டமான இந்தி திணிப்பு... பாஜகவை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!
எடப்பாடி பழனிசாமி

சென்னை: புதிய சட்டங்கள் மூலம் அப்பட்டமான இந்தி திணிப்பு மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டங்களுக்கு (ஐஇசி) மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய கூட்டணி அரசு கொண்டு வந்துள்ளது.

இந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களும் இந்தியாவில் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. புதிய சட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சட்டியுள்ளன. 

புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நாட்டின் பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினார்கள். தமிழ்நாட்டிலும் வழக்கறிஞர்கள் சார்பில் போராட்டம் நடந்தது. 

புதிய சட்டங்களுக்கு ஒருபக்கம் எதிர்ப்புகள் குவியும் நிலையில், மறுபக்கம் புதிய சட்டங்கள் குறித்து நாடு முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள், சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் 40 லட்சம் தன்னாா்வலா்களுக்கு மத்திய சட்ட அமைச்சகம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதிய சட்டங்கள் மூலம் அப்பட்டமான இந்தி திணிப்பு மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், ''இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில் இந்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது.

மாற்றங்களில் சில விமர்சனத்திற்கு உட்பட்டதாகவே இருக்கிறது , முக்கியமாக சட்டத்தின் பெயர்கள் சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில்  மாற்றப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல மற்றும் மிகுந்த கண்டனத்திற்குரியதும் கூட.

அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு. இந்தி திணிப்பானது பல மொழிகள் -  பல கலாச்சாரங்கள் சங்கமித்திற்கும் நமது தேசத்தின் அடிப்படை நீதிக்கும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் எதிரானது,

அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்களை மாற்றியமைத்து இச்சட்டத்தில் உள்ள குளறுபடிகளை நெறிப்படுத்தி, சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் உள்ள சட்டத்தின் பெயர்களை மீண்டும் ஆங்கிலத்திலேயே மாற்றம் செய்யவேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow